Published : 03 Aug 2020 06:28 AM
Last Updated : 03 Aug 2020 06:28 AM

படைகளை விலக்கிக் கொள்ளும் விவகாரம்: இந்தியா - சீனா கமாண்டர்கள் 5-வது சுற்று பேச்சுவார்த்தை

புதுடெல்லி

லடாக் எல்லை பகுதியில் பதற்றத்தை முழுமையாக தணிக்கும் வகையில் படைகளை விலக்கிக் கொள்வது தொடர்பாக இந்தியா - சீனா ராணுவ கமாண்டர்கள் நேற்று 5-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

காஷ்மீரில் லடாக் பகுதியில் கடந்த ஜூன் மாதம் சீன ராணுவத்தினர் அத்து மீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் 40-க்கும் மேற்பட்டோர் இறந்ததாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து, எல்லையில் இருதரப்பிலும் படைகள் குவிக்கப்பட்டு பதற்றம் நிலவியது. ராணுவ அதிகாரிகள் அளவிலும் தூதரக ரீதியாகவும் ஏற்கெனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு படைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு பதற்றம் தணிக்கப்பட்டது.

இதனிடையே, எல்லையின் பெரும்பாலான இடங்களில் படைகள் குறைக்கப்பட்டு முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக சீனா கடந்த வாரம் தெரிவித்தது. ஆனால், படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கை முழுமையடையவில்லை என்றும் விரைவில் மூத்த ராணுவ கமாண்டர்கள் அளவில் இதுகுறித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என இந்தியா பதிலளித்தது.

இந்நிலையில், இந்தியா - சீனா ராணுவ கமாண்டர்கள் நேற்று 5-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர். எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே சீன பகுதியில் மோல்டோ என்ற இடத்தில் இந்தப் பேச்சுவார்த்தை நேற்று காலை 11 மணிக்கு தொடங்கி பல மணி நேரம் நீடித்தது.

லடாக் எல்லையை ஒட்டியுள்ள பகுதி யில் பன்காங் ட்சோ உள்ளிட்ட பகுதி களில் சீன படைகளை திரும்பப் பெற்று படைகளை முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்று இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. பேச்சு வார்த்தை சுமூகமாக நடந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x