Last Updated : 02 Aug, 2020 05:24 PM

 

Published : 02 Aug 2020 05:24 PM
Last Updated : 02 Aug 2020 05:24 PM

அமித் ஷாவுக்கு கரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குக் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 17 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 37 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இதில் ஆறுதல் அளிக்கும் விஷயமாக 11 லட்சம் பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இருப்பினும் கரோனாவில் மாநில முதல்வர்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் பாதிக்கப்படும் நிலையும் இருந்து வருகிறது. மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகான் கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஒடிசா, அசாம், உத்தரப் பிரதேசம், தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களில் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டு வெற்றிகரமாக மீண்டுள்ளனர். சிலர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். சில எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். உ.பி. கேபினட் அமைச்சர் கமல் ராணி இன்று கரோனாவால் உயிரிழந்தார்.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குக் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''கரோனா வைரஸ் பாதிப்புக்கான லேசான அறிகுறிகள் எனக்கு இருந்தன. இதையடுத்து, நான் கரோனா பரிசோதனை மேற்கொண்டபோது, எனக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தற்போது எனது உடல்நிலை நலமாக இருக்கிறது. மருத்துவமனையின் அறிவுரைப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தயவுசெய்து தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு, பரிசோதனை செய்து கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x