Published : 01 Aug 2020 05:41 PM
Last Updated : 01 Aug 2020 05:41 PM

இளைய தலைமுறையின் கண்டுபிடிப்புகள்  சவாலான நேரத்தில் நாட்டிற்கு பேருதவியாக அமையும்: ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் இறுதிப் போட்டியில் பிரதமர் மோடி புகழாரம்

இளைய தலைமுறையின் கண்டுபிடிப்புகள் இந்த சவாலான நேரத்தில் நமது நாடு மேலும் முன்னோக்கிச் செல்ல உதவிகரமாக அமையும் என பிரதமர் மோடி கூறினார்.

உலகில் இதுவரை நடந்திராத ஸ்மார்ட் இந்தியாஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் இறுதிப் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஹேக்கத்தான் போட்டி, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில், பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ் மற்றும் ஐ4சி ஆகியவற்றின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020-க்காக, மாணவர்களின் சிந்தனைகளைத் தேர்வு செய்வதற்கான கல்லூரிகள் அளவிலான முதற்கட்டப் பணி, கடந்த ஜனவரி மாதமே நடத்தப்பட்டு, கல்லூரி அளவில் வெற்றிபெற்ற அணிகள் மட்டுமே, தேசிய அளவிலான ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

நமது அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் சில சிக்கல்களுக்குத் தீர்வுகாண, மாணவர்கள் பயன்படுத்தக் கூடிய நாடுதழுவிய ஒரு ஏற்பாடாக இந்த ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் நடத்தப்படுவதுடன், புதுமையான பொருட்களைக் கண்டுபிடிக்கும் கலாச்சாரத்தை கற்பிக்கும் விதமாகவும், சிக்கல்களுக்குத் தீர்வுகாணும் மனநிலையை உருவாக்கும் நோக்கத்துடனும் நடத்தப்படுகிறது.
இளைஞர்களின் மனதில், சிந்திக்கும் திறனை ஏற்படுத்துவதில் இந்தப் போட்டி மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது நிரூபணமாகியுள்ளது.

நான்காவது ஆண்டாக இந்த போட்டி நடைபெறுகிறது. 2017-ல் நடத்தப்பட்ட முதலாவது ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் 42,000 மாணவர்கள் பங்கேற்றனர்.

இது 2018-ல் 1 லட்சம் பேராகவும், 2019-ல் 2 லட்சமாகவும் அதிகரித்தது. ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020-ன் முதல் சுற்றில், 4.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்த ஆண்டுக்கான மென்பொருள் பிரிவினருக்கான மாபெரும் இறுதிப்போட்டி, நாடு முழுவதும் உள்ள அனைத்து போட்டியாளர்களும் ஆன்லைன் வாயிலாக பங்கேற்கும் விதமாக, அதற்கென உருவாக்கப்பட்ட அதிநவீன சிறப்பு அமைப்பின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக இந்த நிகழ்ச்சியில் உரையாற்றினார். அவர் பேசியதாவது:

‘‘கரோனா வைரஸ் பரவி நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்த காலத்தில் ஹேக்கத்தான் போட்டி நடத்துவது மிகவும் சவாலானது. ஆனால் அதனை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம். இது ஆச்சரியப்படத்தக்க ஒன்று. இந்த நிகழ்ச்சியை நடத்தியவர்களையும், பங்கேற்றவர்களையும் நான் வெகுவாக பாராட்டுகிறேன்.

மழையை அளவிடுவது தொடர்பான மாணவர்களின் கண்டுபிடிப்பு விவசாயிகளுக்கு மிகவும் பயனளிக்கும். நாட்டிற்கும் பயனுள்ளதாக அமையும். இதுபோன்ற புதுமை கண்டுபிடிப்புகள் வெற்றி பெற்றால் அது சமூகத்திற்கு மிகவும் பயனளிக்கும்.

இளைய தலைமுறையின் கண்டுபிடிப்புகள் இந்த சவாலான நேரத்தில் நமது நாடு மேலும் முன்னோக்கிச் செல்ல உதவிகரமாக அமையும்.’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x