Last Updated : 01 Aug, 2020 08:56 AM

 

Published : 01 Aug 2020 08:56 AM
Last Updated : 01 Aug 2020 08:56 AM

ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க கரசேவையில் இறந்த சகோதரர்கள் குடும்பத்துக்கு அழைப்பு

புதுடெல்லி

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த இளம் சகோதரர்கள் ராம்குமார் கோத்தாரி (21) மற்றும் சரத்குமார் கோத்தாரி (19). இவர்கள் கடந்த 1990-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி அயோத்தியில் விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) நடத்திய கரசேவையில் கலந்து கொள்ள அயோத்தி சென்றிருந்தனர். இக்கரசேவைக்கு அப்போதைய ஜனதா தளம் கட்சியின் உத்தர பிரதேச முதல்வர் முலாயம் சிங் தடை விதித்திருந்தார்.

தடையை மீறி பாபர் மசூதி வளாகப் பகுதியில் ஒரு பறவைபறந்தாலும் சுட்டுத் தள்ளுவதாகவும், அங்கு எந்த மசூதியையும் இடிக்க அனுமதிக்க முடியாது என்றும் முதல்வர் முலாயம் எச்சரித்திருந்தார். இதற்காக அப்போது அயோத்தி செல்வதற்கான போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டிருந்தன. இதனால் ஆஸம்கர் வரை ரயிலில் வந்தவர்கள் அங்கிருந்து 2 தினங்கள் நடந்து அயோத்தி சேர்ந்தனர். உத்தர பிரதேச போலீஸ் பாதுகாப்புகளையும் மீறி பாபர் மசூதியின் முக்கிய உச்சிப் பகுதியில் ஏறியவர்கள் அங்கு விஎச்பியின் காவிக்கொடியை கட்ட முயன்றனர். அப்போது கோத்தாரி சகோதரர்களை போன்ற கரசேவையினர் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில், கோத்தாரி சகோதரர்கள் உள்ளிட்ட 17 கரசேவகர்கள் இறந்தனர் . தற்போது ஆகஸ்ட் 5-ல் அதிகாரப்பூர்வமாக ராமர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டப்படும் நிலையில் இறந்த கோத்தாரி சகோதரர்களின் குடும்பத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள அவர்களது சகோதரியான பூர்ணிமா கோத்தாரி அயோத்தி செல்கிறார்.

இதுகுறித்து ’இந்து தமிழ்’ நாளேட்டிடம் கோத்தாரியின் இளைய சகோதரர் சுபாஷ் கோத்தாரி கூறும்போது, ‘‘மற்ற கரசேவகர்கள் மீது நடந்த துப்பாக்கி சூட்டில் அன்று எனது சகோதரர்கள் ஒருவீட்டில் தங்கியிருந்த போது வெளியில் இழுத்து வந்து போலீஸாரால் தனியாகக் கொல்லப்பட்டனர். அவர்களது உடல்கள் நவம்பர் 2-ல் சரயு நதிக்கரை ஓரத்தில் கிடைத்தன. எங்கள் குடும்பத்தில் இருவர் செய்த உயிர்த் தியாகம் வீணாகாத வகையில் இப்போது 30 வருடங்களுக்கு பின் ராமர் கோயில் கட்டப்படுகிறது. இந்த நாள் எங்கள் வாழ்க்கையின் பொன்னான நாளாகும்’’ என்றார்.

கரசேவையின் போது ராம்குமார், சரத்குமார் ஆகியோர் வழியில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை கடிதங்கள் மூலம் தனது தந்தை ஹீராலால் கோத்தாரிக்கு எழுதியிருந்தனர். அவை, இருவரும் இறந்த பிறகு கொல்கத்தா வீட்டுக்கு சென்று சேர்ந்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x