Last Updated : 01 Aug, 2020 07:35 AM

 

Published : 01 Aug 2020 07:35 AM
Last Updated : 01 Aug 2020 07:35 AM

இந்தியாவிலிருந்து சர்வதேச விமானப் போக்குவரத்து சேவை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ரத்து: மத்திய அரசு அறிவிப்பு

கோப்புப்படம்

புதுடெல்லி,

இந்தியாவிலிருந்து சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்துச் சேவையை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ரத்து செய்து மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது.

அதேசமயம், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளுடன் கட்டுப்பாடுகளுடன், விதிமுறையைப் பின்பற்றி விமானப் போக்குவரத்தைத் தொடங்குவது குறித்தும் மத்திய அரசு பேசி வருகிறது.

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது சர்வதேச விமானப் போக்குவரத்தை கடந்த மார்ச் 22-ம் தேதி மத்திய அரசு நிறுத்தியது. அதன்பின் சர்வதேச அளவில் வர்த்தகரீதியான பயணிகள் விமானப் போக்குவரத்தை அரசு தொடங்க அனுமதிக்கவில்லை.

அதேசமயம், வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்கும் பொருட்டு, வந்தே பாரத் மிஷன் திட்டத்தை மத்திய அரசு கடந்த மேம 7-ம் தேதி முதல் செயல்படுத்தி வருகிறது.

இதுவரை 4 கட்ட வந்தே பாரத் மிஷன் முடிந்துள்ளன. 8.80 லட்சம் இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் இருந்து தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்த வந்தே பாரத் மிஷன் திட்டத்தில் இதுவரை 2,500-க்கும் மேற்பட்ட விமானங்கள் ஈடுபட்டுள்ளன. இதில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மட்டும் 2.67 லட்சம் இந்தியர்களை வெளிநாடுகளில் இருந்து அழைத்து வந்துள்ளது. மற்ற நிறுவன விமானங்கள் மூலம் 4.86 லட்சம் பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் இன்னும் குறையவில்லை. தற்போது இந்தியாவில் 16 லட்சம் பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். நாள்தோறும் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

36 ஆயிரம் பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த நேரத்தில் சர்வதேச விமானப் போக்குவரத்து தொடங்குவது ஏதுவானதாக இருக்காது என்பதால், சர்வதேச விமானப் போக்குவரத்து ரத்து செய்யும் உத்தரவை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

இதுகுறித்து மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநரகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “ கரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கும் வர்த்தக ரீதியான சர்வதேசப் பயணிகள் விமானப் போக்குவரத்து சேவை ஆகஸ்ட் 31-ம் தேதி நள்ளிரவு 11.59 வரை நிறுத்தப்படுகிறது.

அதேசமயம், சர்வதேச அளவில் சரக்கு விமானப் போக்குவரத்தை விமானப் போக்குவரத்து விதிகளுக்கு உட்பட்டுச் செயல்படுவதில் எந்தவிதமான தடங்கலும் இல்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளுடன் கட்டுப்பாடுகளுடன், விதிமுறையைப் பின்பற்றி வர்த்தகரீதியற்ற விமானப் போக்குவரத்தைத் தொடங்குவது குறித்தும் மத்திய அரசு பேசி வருகிறது. அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x