Last Updated : 31 Jul, 2020 05:18 PM

 

Published : 31 Jul 2020 05:18 PM
Last Updated : 31 Jul 2020 05:18 PM

மெகபூபா முப்திக்கு மேலும் 3 மாதங்களுக்கு வீட்டுக் காவல் நீட்டிப்பு: ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் உத்தரவு

பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தியின் வீட்டுக் காவலை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதேசமயம், மக்கள் மாநாட்டுக் கட்சியின் தலைவர் சஜித் லோன், ஏறக்குறைய ஓராண்டுக்குப் பின் இன்று விடுக்கப்பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அதிகாரம் வழங்கும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டு, மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி அறிவித்தது.

இந்த அறிவிப்புச் செய்வதற்கு முதல் நாள் இரவில் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, அவரின் மகனும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் முன்னாள் முதல்வர்கள் மூவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

இதற்கிடையே முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா ஆகியோர் மீது பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காஷ்மீர் நிர்வாகம் அறிவித்தது.

பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டால், விசாரணையின்றி ஓராண்டு வரை காவலில் வைத்திருக்க முடியும்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து வீட்டுக் காவலில் இருந்த உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா ஆகிய இருவரும் கடந்த மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டனர்.

இதில் கரோனா லாக்டவுனை மத்திய அரசு அறிவிக்கும் நாளில்தான் உமர் அப்துல்லா விடுவிக்கப்பட்டார். ஆனால், மெகபூபா முப்தியை விடுவிப்பது குறித்து எந்த முடிவையும் காஷ்மீர் நிர்வாகம் எடுக்கவில்லை.

இந்நிலையில் மெகபூபா முப்திக்கு விதிக்கப்பட்டிருந்த பொதுப் பாதுகாப்புச் சட்டம் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதியுடன் முடிவதால், காவலை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து, ஜம்மு காஷ்மீர் உள்துறை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதனால் மெகபூபா முப்தி மேலும் 3 மாதங்கள் ஸ்ரீநகரில் உள்ள ஃபேர்வியூ பங்களாவில் வீட்டுக் காவலில் இருக்க வேண்டிய நிலையில் உள்ளார். வரும் 5-ம் தேதியுடன் ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஓர் ஆண்டாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x