

காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் நேற்று தனது ட்விட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது:
அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்த 2020-ம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையை வரவேற்க நிறைய இருக்கிறது. எங்களில் சிலர் அளித்த பல பரிந்துரைகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டதாக தெரிகிறது. இருப்பினும் இது ஏன் முதலில் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்காக கொண்டுவரப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தில் நான் இருந்த நாளில் இருந்து, 21-ம் நூற்றாண்டுக்கு ஏற்றவாறு 1986-ம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையை திருத்தி அமைக்கும்படி பரிந்துரைத்து வந்தேன். மோடி அரசு இதை செய்வதற்கு 6 ஆண்டுகள் எடுத்துக் கொண்டாலும் கூட இதை செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இதில் சவால் என்னவென்றால் நமது எதிர்பார்ப்புகள் நடைமுறைக்கு வருவதை உறுதி செய்வது ஆகும்.
மொத்த உள்நாட்டு உற்பத்தில் 6% கல்விக்கு செலவிடப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.ஆனால், கடந்த 6 ஆண்டுகளில் மோடி அரசு கல்விக்கான செலவை குறைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.