Published : 30 Jul 2020 04:18 PM
Last Updated : 30 Jul 2020 04:18 PM

கரோனா பாதிப்பு; டெல்லி ஆயுர்வேத மையத்தில் சிகிச்சை வசதி தொடக்கம்

கோவிட் 19 பாதிப்பைக் கண்டறியவும், இலவச மருத்துவப் பரிசோதனை மற்றும் நோய் பாதித்தவர்களுக்கு இலவச சிகிச்சையும் டெல்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேதா சிகிச்சை மையத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

ஆயுஷ் துறை அமைச்சர் ஸ்ரீபாத எஸ்ஸோ நாயக் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பின்படி, கோவிட் நோயைக் கண்டறிதலுக்கான இலவச மருத்துவப் பரிசோதனை மற்றும் நோய் பாதித்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் வசதி புதுடெல்லி உள்ள அகில இந்திய ஆயுர்வேத சிகிச்சை மையத்தின் (ஏ.ஐ.ஐ.ஓ.) கோவிட் 19 சுகாதார மையத்தில் தொடங்கப் பட்டுள்ளது.

கோவிட்-19 பாதித்த நோயாளிகளுக்கான சிகிச்சை வசதிகளை ஆய்வு செய்ய கோவிட் சுகாதார மையத்தில் ஆயுஷ் துறை அமைச்சர் நாயக் 2020 ஜூலை 28 ஆம் தேதி ஆய்வு செய்தார். அனைத்து நோயாளிகளுக்கும் இலவசமாக மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை வசதிகள் அந்த மையத்தில் அளிக்கப்படும் என அப்போது அமைச்சர் அறிவித்தார்.

அந்த மையத்தின் தீவிர சிகிச்சைப் பிரிவையும் அவர் தொடங்கி வைத்தார். அதில் வென்டிலேட்டர் வசதியும், அவசர சிகிச்சைப் பிரிவிற்குத் தேவையான இதர தரநிலைப்படுத்திய சாதனங்களின் வசதிகளும் உள்ளன.

கோவிட்-19 நோய் கண்டறிவதற்கான பரிசோதனை மையமாக (RT-PCR மற்றும் துரித ஆண்டிஜென் பரிசோதனை) ஏ.ஐ.ஐ.ஏ.-விற்கு டெல்லி அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. தொலைபேசி மூலம் பொது மக்கள் கேட்கும் தகவல்களை அளிப்பதற்காக ஏ.ஐ.ஐ.ஏ. வில் கால்சென்டர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நோய்த் தடுப்பு மற்றும் குணப்படுத்தல் சிகிச்சையில் ஏ.ஐ.ஐ.ஏ. முக்கிய பங்கு வகிக்கிறது. ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் அஸ்வகந்தா, வேம்பு, காளமேகம், கிலாய் போன்ற மருந்துகள் குறித்த ஆராய்ச்சியும் இங்கு மேற்கொள்ளப் படுகிறது.

ஆயுஷ் அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி டெல்லியில் 80,0000 காவல் துறையினருக்கு `ஆயுரக்சா' என்ற நோய் தடுக்கும் மருந்துகள் அளிக்கும் செயல்பாடுகளுக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். கோவிட்-19 நோய்த் தடுப்பில் முன்கள வீரர்களாக டெல்லி காவல் துறையினர் செயல்பட்டு வருகின்றனர்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், கோவிட்-19-க்கு எதிரான வாழ்க்கை நிலையை மேம்படுத்திக் கொள்ளவும் ஆயுரக்சா தொகுப்புப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. ஆயுரக்சா தொகுப்பில் சன்ஷாமணி வதி (கிலாயில் இருந்து தயாரிப்பது), மூக்கில் போட்டுக் கொள்வதற்கான ஆயுஷ் கதா மற்றும் அனு தைலம் ஆகியவை உள்ளன.

இதுவரை இரண்டு சுற்றுகளாக 1,58,454 ஆயுரக்சா தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 90 சதவீதம் காவல் துறையினருக்கு இவ்வாறு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய பொது சுகாதார அறக்கட்டளை உதவியுடன் டெல்லி காவல் துறையினர் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. பதற்றம் குறைந்திருப்பது, பொதுவாக ஆரோக்கியமாக இருத்தல், சளி, இருமல் போன்ற சிறிய அறிகுறிகள் குறைவாக இருத்தல் என நேர்மறை விளைவுகள் கிடைத்திருப்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தில்லியில் பொது மக்கள் மத்தியில் கோவிட்-19 நோய் பாதிப்பு இருப்பதுடன் ஒப்பிட்டால், காவல் துறையினர் பாதிக்கப்படும் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதாகக் கண்டறியப் பட்டுள்ளது.

ஏ.ஐ.ஐ.ஏ. வளாகத்தில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்ட போது, டாக்டர்களுடன் அவர் கலந்துரையாடினார். அந்த மையத்தில் உள்ள நோயாளிகளின் நலன் பற்றி அமைச்சர் கேட்டறிந்தார். கோவிட்-19 சிகிச்சை மையத்தில் உள்ள வசதிகள் பற்றி நோயாளிகளின் கருத்துகளையும், ஆயுர்வேத மருந்துகளைக் கொண்டு அளிக்கப்படும் சிகிச்சைக்கு கிடைத்த பலன்கள் பற்றியும் அவர் கேட்டறிந்தார்.

கோவிட்-19 நோய்த் தாக்குதல் சூழ்நிலையில் ஏ.ஐ.ஐ.ஏ. அளித்து வரும் சேவைகள் குறித்து அமைச்சர் திருப்தி தெரிவித்தார். ஆயுர்வேத மருந்துகளைக் கொண்டு கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில், ஏ.ஐ.ஐ.ஏ. குழுவினரிடம் உள்ள உத்வேகம், ஆர்வம், துணிச்சல் மற்றும் முயற்சிகள் ஆகியவை பாராட்டுக்குரிய வகையில் இருப்பதாக அமைச்சர் கூறினார். தனிப்பட்ட நபர்களுக்கு ஏற்றவாறு ஆயுர்வேத சிகிச்சை, உணவுப் பட்டியல், யோகா மற்றும் மன அழுத்தம் குறைக்கும் நுட்பங்களை அளித்து முழுமையான குணப்படுத்தல் அணுகுமுறையைக் கையாள்வதில் ஏ.ஐ.ஐ.ஏ. முன்மாதிரியான பங்களிப்பைச் செய்கிறது என்று அமைச்சர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x