Published : 30 Jul 2020 01:32 PM
Last Updated : 30 Jul 2020 01:32 PM

ரூ.3,000 கோடியில் உலகின் மிக உயரமான ராமர் சிலை: நிலம் கையகப்படுத்துவதில் யோகி அரசுக்குச் சிக்கல்

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தான் பதவியேற்ற போது 251மீ உயர ராமர் சிலை ஒன்றை சரயு நதிக்கரையில் எழுப்ப அறிவித்திருந்தார், இதோடு ராமஜென்மபூமியிலிருந்து 6 கிமீ தொலைவில் இந்த மகா சிலையோடு அருங்காட்சியகம் ஒன்றையும் கட்டத் திட்டமிட்டிருந்தார்.

2017-ல் இதற்கான திட்டத்தை அறிவித்தார் யோகி ஆதித்யநாத் ஆனால் 3 ஆண்டுகள் ஆன பிறகும் கூட இதற்கான நிலம் கையகப்படுத்துவதில் யோகி ஆதித்யநாத் அரசு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.

183 மீட்டர் சர்தார் வல்லபாய் படேல் சிலையை விடவும் உயரமானது இந்த ராமர் சிலை. இந்தத் திட்டம் சுமார் ரூ.3000 கோடி வரையிலான செலவுத்திட்டமாகும். சரயு நதிக்கரையில் சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த ராமர் சிலை திட்டமிடப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் என்பதுடன் சேர்த்து இந்த மகா சிலை திட்டமும் இன்னொரு மைல்கல்லாக பரிசீலிக்கப்பட்டது.

ஆனால் இதற்கான நிலம் கையகப்படுத்துதலில் உள்ளூர்வாசிகள், விவசாயிகள் எதிர்ப்புகளினால் சிக்கல் எழுந்தது. மேலும் நிர்வாகம் நிலத்தை தேர்வு செய்வதிலும் தாமதங்கள் ஏற்பட்டதால் இன்னும் நிலம் கையகப்படுத்த முடியவில்லை.

இந்த ஆண்டு ஜனவரியில் அயோத்தி நிர்வாகம் இதற்காக 86 ஏக்கர்கள் நிலம் கையகப்படுத்த அறிவிக்கை வெளியிட்டது. அதாவது மஜ்ஹா பர்ஹதா மற்றும் இதையொட்டிய கிராமங்களில் நிலம் வாங்க அறிவிக்கை விடுக்கப்பட்டது. இதோடு அருங்காட்சியகம் அமைக்கவும் திட்டமிடப்பட்டது.

இதனால் 125 குடும்பங்களும், 66 நிரந்தர வீடுகளும் பாதிக்கப்படும் என்று அயோத்தி நிர்வாகமே கூறி இதில் இப்பகுதி மக்களுக்கு அசவுகரியம் இருந்தால் ஆட்சேபணையைப் பதிவு செய்யவும் கோரியிருந்தது. இதனையடுத்து விவசாயிகள் அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதற்கு நீதிமன்றம் 2013 நிலம் கையகப்படுத்தல் வழிமுறைகளைப் பின்பற்ற உ.பி. அரசுக்கு உத்தரவிட்டது. இந்தச் சட்டத்தின் படி நில உரிமையாளர்களுக்கு 60 நாட்கள் கால அவகாசம் அளிக்க வேண்டும். ஆனால் 15 நாட்கள் அவகாசமே அளிக்கப்பட்டது.

மேலும் நிலம் பரஸ்பர ஒப்புதலின்படிதான் கையகப்படுத்த வேண்டும். நிர்வாகத்துக்கு விவசாயிகளிடமிருந்து சுமார் 200 புகார்கள் வந்தன.

இந்த பிரச்சினைகளுக்கு இடையே உ.பி. அரசு கடந்த நவம்பரில் சிலைக்காக 61 ஹெக்டேர் நிலத்தை வாங்க ரூ.447 கோடி ஒதுக்கியது. இதில் இந்தத் திட்டத்துக்காக முதலில் ரூ.200 கோடியை ரிலீசும் செய்தது.

இந்நிலையில் சுமுகமாக இந்தப் பிரச்சினையை தீர்த்து உலக மகா ராமர் சிலையை வடிவமைக்க உ.பி. அரசு திட்டமிட்டு வருகிறது.

-ஏஜென்சி செய்திகள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x