

பிஹார் வெள்ளத்திற்கு 38 லட்சத்து 47 ஆயிரத்து 531 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 25,116 பேர் பாதுகாப்பு முகாம்களில் உள்ளனர் என்று பிஹார் அரசு தெரிவித்துள்ளது.
பல இடங்களில் அரசின் நிவாரண உதவிகளின்றி குடும்பங்கள் உணவின்றி வாடுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தேசியப் பேரிடர் செயற்படை மற்றும் மாநில தேசியப் பேரிடர் குழு ஆகியவை பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேவையாற்றி வருகின்றனர்.
முசாபர்பூர் மாவட்டத்தில் மட்டும் 8 லட்சத்து 77 ஆயிரத்து 138 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுபால் பகுதியில் 81,198 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இடைவிடாத மழையினால் முசாபர்பூரில் கண்டாகி மற்றும் பக்மாதி நதிகளின் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து கடும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளன.
வீடுகள் பல நீருக்குள் மூழ்கின. இதனையடுத்து மக்கள் உயரமான இடம் தேடி தஞ்சம் புகுந்தனர்.
வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து 4-5 நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் நிர்வாகம் எந்த ஒரு உதவியையும் வழங்கவில்லை. குழந்தைகள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ளன. பலர் உணவின்றி தவித்து வருவதாக அங்கு மக்கள் புகார் எழுப்பியுள்ளனர்.