Published : 30 Jul 2020 08:35 AM
Last Updated : 30 Jul 2020 08:35 AM

கேரள தங்கக் கடத்தல் வழக்கு: சதி வலையில் வீழ்ந்தாரா சிவசங்கர் ஐஏஎஸ்?

கேரள தங்கக் கடத்தல் குற்றவாளிகளின் சதி வலையில், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் வீழ்ந்திருக்கலாம் என தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் கருதுவதாக கூறப்படுகிறது.

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக முகவரிக்கு, கடந்த 5-ம் தேதி வந்த சரக்குப் பெட்டிகளில் 30 கிலோ கடத்தல் தங்கம் இருப்பது தெரியவந்தது. இந்த வழக்கை விசாரித்து வரும் என்ஐஏ அதிகாரிகள், கேரள அரசின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பணிபுரிந்து வந்த ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்துள்ளனர்.

முன்னதாக, ஸ்வப்னா சுரேஷை இந்த வழக்கில் இருந்து காப்பாற்ற முயற்சித்ததாக, கேரள முதல்வரின் முதன்மைச் செயலர் சிவசங்கர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதன் தொடர்ச்சியாக, அந்தப் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இந்த தங்கக் கடத்தலில் அவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்டோரிடம் மேற்கொண்ட பலகட்ட விசாரணையில், ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரை தங்கக் கடத்தல்களுக்கு ஒரு பகடைக் காயாக அவர்கள் பயன்படுத்தி வந்தது தெரியவந்திருப்பதாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்வப்னா சுரேஷின் குடும்ப நண்பர் என்பதால், சிவசங்கரின் பெயரைப் பயன்படுத்தி இந்த சட்டவிரோத காரியங்களில் குற்றவாளிகள் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்து என்ஐஏ சார்பில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x