Published : 29 Jul 2020 09:58 PM
Last Updated : 29 Jul 2020 09:58 PM

3-ம் கட்ட ஊரடங்கு தளர்வு; பள்ளி, கல்லூரிகளுக்கு தடை தொடரும்; 5-ம் தேதி முதல் யோகா, உடற்பயிற்சி கூடங்களுக்கு அனுமதி: மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

நாடுமுழுவதும் கரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு தளர்வு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை தொடரும் என மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

ஜூன் மாதம் முதல் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே அமலில் உள்ள ஊரடங்கில் தளர்வுகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது 2-ம் கட்ட ஊரடங்கு தளர்வு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஜூலை 31-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கு ஏற்கெனவே அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் 3-ம் கட்ட ஊரடங்கு தளர்வை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

அதன்படி ஜூலை 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த 3-ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

1) கரோனா தொற்று அதிகமுள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.

2) கரோனா தொற்று குறைவான பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது.

3) தொற்று குறைவான பகுதிகளில் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி நிறுவனங்கள் செயல்படலாம்.

4) சமூக இடைவெளியுடன் போதிய தற்காப்பு நடவடிக்கைகளுடன் இந்த ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்படும்.

5) திரையரங்குகள், மெட்ரோ ரயில் சேவை, நீச்சல் குளம், பார்களுக்கு தற்போதுள்ள தடை தொடரும். அனுமதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

6) பொழுதுபோக்கு பூங்காக்கள், மதுபானக் கூடங்கள், அரங்குகள் செயல்பட விதித்த தடை தொடர்கிறது

7) பள்ளி, கல்லூரிகள் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை இயங்காது

8) திருவிழாக்கள், அரசியல் கூட்டங்கள், விளையாட்டு நிகழ்வுகள் ஆகியவைகளுக்கும் விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்து அமல்படுத்தப்படும்.

9) உள்நாட்டு விமானப் போக்குவரத்து குறைந்த அளவில் கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதி வழங்கப்படும்.

10) வந்தே பாரத் திட்டத்தின் கீழ் தாயகம் திரும்புபவர்களுக்காக மட்டும் வெளிநாட்டு விமானங்கள் இயக்க அனுமதி வழங்கப்படுகிறது.

11) இதைத் தவிர ஆங்காங்கே உள்ள நிலவரம் குறித்து கட்டுப்பாடுகள், தளர்வுகள் குறித்த முடிவுகளை மாநில அரசுகள் முடிவு எடுத்துக்கொள்ளலாம்.

12) கரோனாவை கட்டுப்படுத்த ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள வழிகாட்டும் நெறிமுறைகள் அனைத்தும் இதற்கும் பொருந்தும். அதனை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

13) 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள், மற்றும் வேறுபல நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும். அவர்கள் தேவையற்ற பயணம் மேற்கொள்ளக்கூடாது.

14) விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x