Published : 29 Jul 2020 02:31 PM
Last Updated : 29 Jul 2020 02:31 PM
புவி அறிவியல் துறையில் சிறந்த பங்களிப்புக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னையைச் சேர்ந்த தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனருக்கும் விருது வழங்கப்படுகிறது.
வானிலை, பருவநிலை, பெருங்கடல்கள் மற்றும் இயற்கை பேரிடர்கள் குறித்து தகவல்களை அளித்து வரும் மத்திய புவி அறிவியல் அமைச்சகம், இத்துறையில் சிறந்த பங்களிப்பு செய்தவர்களுக்கான தேசிய விருதுகளை அறிவித்துள்ளது. புவி முறை அறிவியலின் பல்வேறு துறைகளில் முக்கியமான அறிவியல் பங்களிப்பு செய்து வரும் சிறந்த விஞ்ஞானிகள், பொறியாளர்கள் ஆகியோருக்கு அங்கீகாரம் அளிப்பதும், இந்தத் துறையில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ள பெண்கள் மற்றும் இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிப்பதும் இந்த விருதுகளின் குறிக்கோளாகும்.
சென்னையில் உள்ள தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் எம்.ஏ.ஆத்மானந்துக்கு பெருங்கடல் தொழில்நுட்பத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஆழ்கடல் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக விளங்கும் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
நிலவியல் துறையில் மிகச் சிறந்த பங்களிப்பு செய்து வரும் பேராசிரியர் அசோக் சாஹினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம் தேசிய பெருங்கடல் ஆய்வு நிறுவனத்தின் மூத்த முதன்மை விஞ்ஞானி டாக்டர் வி.வி.எஸ்.எஸ்.சர்மா, கோவா தேசிய துருவ மற்றும் பெருங்கடல் ஆய்வு மையத்தின் இயக்குனர் டாக்டர் எம்.ரவிச்சந்திரன் ஆகியோருக்கு பெருங்கடல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான தேசிய விருது வழங்கப்பட உள்ளது.
திருவனந்தபுரம் விஎஸ்எஸ்சி விஞ்ஞானி டாக்டர் சுரேஷ் பாபுவுக்கு, வளி மண்டல அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தின் நிலவியல் துறையைச் சார்ந்த என்.வி.சலபதிராவுக்கு,
நிலஅறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தேசிய விருதும், பெண் விஞ்ஞானிக்கான அன்னா மானி விருது, கோவா தேசிய பெருங்கடல் அறிவியல் நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி டாக்டர் லிடியா டி.எஸ்.கண்டேபார்கருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT