Published : 29 Jul 2020 08:22 AM
Last Updated : 29 Jul 2020 08:22 AM

ஒரே நாளில் 1 லட்சம் கரோனா பரிசோதனை: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தகவல்

லக்னோ

உத்தரபிரதேசத்தில் ஒரே நாளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகள் நடந்துள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பரிசோதனைகளை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மும்பை, கொல்கத்தா, உபி.யின் நொய்டா ஆகிய இடங்களில் அதிவிரைவு கரோனா பரிசோதனை மையங்களை அமைத்துள்ளது. இந்த மையங்களை டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இதில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, காணொலி காட்சி மூலம் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது;

கரோனா தொற்றை தடுக்க உ.பி. அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதிவிரைவு கரோனா பரிசோதனை மையத்தை நொய்டாவில் தொடங்கி வைத்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன். உ.பி. அரசு கரோனா பரிசோதனைகளை அதிகரித்து வருகிறது. கடந்த 26-ம் தேதி ஒரே நாளில் உ.பி.யில் 1 லட்சத்து 6 ஆயிரம் கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 23-ம் தேதி ஒரு நாளில் வெறும் 72 பரிசோதனைகள் என்ற அளவில் இருந்து இப்போது ஒரு நாளுக்கு 1 லட்சம் பரிசோதனை என்ற அளவுக்கு சோதனைகளை மிகப் பெரிய அளவில் அதிகரித்துள்ளோம். இவ்வாறு யோகி ஆதித்யநாத் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x