Published : 28 Jul 2020 10:24 PM
Last Updated : 28 Jul 2020 10:24 PM

கேரளாவில் இன்று 1,167 பேருக்கு கரோனா தொற்று; 4 பேர் மரணம்: முதல்வர் பினராயி விஜயன் பேட்டி 

கேரளாவில் இன்று 1,167 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், 4 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் செவ்வாய்க் கிழமை திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

கேரளாவில் இன்று 1,167 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 679 பேர் குணமடைந்துள்ளனர். இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 888 பேருக்கு கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததின் மூலம் நோய் பரவி உள்ளது.

இதில் 55 பேருக்கு நோய் எப்படி, எங்கிருந்து பரவியது என தெரியவில்லை. இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 122 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 96 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள் ஆவர். இன்று சுகாதாரத் துறையை சேர்ந்த 33 பேருக்கு நோய் பரவியுள்ளது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் தான் மிக அதிகமாக 222 பேருக்கு இன்று நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று கேரளாவில் 4 பேர் கரோனா பாதித்து மரணமடைந்துள்ளனர். எர்ணாகுளத்தை சேர்ந்த 72 வயதான அபூபக்கர் என்பவரும், காசர்கோட்டை சேர்ந்த 70 வயதான அப்துல் ரகுமான் என்பவரும், ஆலப்புழாவை சேர்ந்த 67 வயதான சைனுதீன் என்பவரும், திருவனந்தபுரத்தை சேர்ந்த 65 வயதான செல்வமணி என்பவரும் இன்று மரணமடைந்தனர். திருவனந்தபுரம், கோட்டயம், ஆலப்புழா மற்றும் திருச்சூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று நோயாளிகளின் எண்ணிக்கை 100க்கும் மேல் உள்ளது.

இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 222 பேர் திருவனந்தபுரம் மாவட்டத்தையும், 118 பேர் கோட்டயம் மாவட்டத்தையும், 112 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், 109 பேர் திருச்சூர் மாவட்டத்தையும், 95 பேர் கொல்லம் மாவட்டத்தையும், 86 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 84 பேர் ஆலப்புழா மாவட்டத்தையும், 70 பேர் எர்ணாகுளம் மாவட்டத்தையும், 67 பேர் கோழிக்கோடு மாவட்டத்தையும், 63 பேர் பத்தனம்திட்டா மாவட்டத்தையும், 53 பேர் வயநாடு மாவட்டத்தையும், 43 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், 38 பேர் காசர்கோடு மாவட்டத்தையும், 7 பேர் இடுக்கி மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். கேரளாவில் தற்போது 1,50,716 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

இவர்களில் 1,40,898 பேர் வீடுகளிலும், 9,818 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர். இன்று நோய் அறிகுறிகளுடன் 1,343 பேர் பல்வேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 19,140 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. மேலும் ட்ரூநாட், ஆன்டிஜன் உட்பட இதுவரை 7,09,348 பேருக்கு பல்வேறு வகை பரிசோதனைகள் நடத்தப் பட்டுள்ளன. இதில் 6,596 பரிசோதனை முடிவுகள் இன்னும் வர உள்ளன.

இது தவிர சுகாதாரத்துறை ஊழியர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள 1,16,418 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 1,13,073 பேருக்கு நோய் இல்லை என தெரியவந்துள்ளது. கேரளாவில் நோய் தீவிரம் உள்ள பகுதிகளின் எண்ணிக்கை தற்போது 486 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா நோய் திருவனந்தபுரம் மாவட்டத்தில் அதிவேகமாக பரவி வருகிறது வருகிறது. இதனால் இந்த மாவட்டத்தில் மிக ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது. இன்று திருவனந்தபுரம் அருகே உள்ள மேனம்குளம் தொழில் பூங்காவில் 300 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 88 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. தேசிய அளவில் 12 பேருக்கு பரிசோதனை நடத்தப்படும் போது அதில் ஒருவருக்கு நோய் உறுதி செய்யப்படுகிறது. ஆனால் கேரளாவில் 36 பேருக்கு பரிசோதனை செய்யப்படும் போது ஒருவருக்கு நோய் உறுதி செய்யப்படுகிறது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் 18 பேரை பரிசோதிக்கும் போது ஒருவருக்கு நோய் உறுதி செய்யப்படுகிறது.

திருமணம் மற்றும் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்களுக்கு நோய் பரவுவது கேரளாவில் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே இதுபோன்ற நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் கலந்துகொள்ள கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் சில இடங்களில் திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என புகார்கள் வந்துள்ளன.

எனவே இதைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. இதன் காரணமாக திருமணம் மற்றும் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் 20 பேருக்கு மேல் கூட கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. செட்டிநாடு பஞ்சாயத்தில் ஒரு திருமணத்தில் கலந்து கொண்ட 30க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் பின்னர் தான் நிபந்தனைகளை கடுமையாக்க தீர்மானிக்கப்பட்டது.

கேரளாவில் கரோனா பரிசோதனைகள் மிகவும் குறைவாக நடத்தப்படுகிறது என்றும், பரிசோதனை முடிவுகள் தாமதமாகிறது என்றும் சிலர் புகார் கூறுகின்றனர். ஆனால் அதில் எந்த உண்மையும் கிடையாது. சுகாதாரத் துறையை சேர்ந்தவர்கள் 24 மணி நேரமும் இடைவிடாது பரிசோதனைகள் நடத்தி வருகின்றனர்.

தற்போது பரிசோதனை எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கரோனா நோய் குறித்து பல்வேறு வதந்திகள் சமூக இணையதளங்களில் பரவி வருகிறது. இது சட்டப்படி குற்றமாகும். எனவே சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவர்கள் மீது ஐடி சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பக்ரீத் பண்டிகையை ஒட்டி பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த 100 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x