Published : 28 Jul 2020 06:21 PM
Last Updated : 28 Jul 2020 06:21 PM
அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை விழாவில் பங்கேற்பது அரசியல் சட்டத்தின் கீழ் பதவியேற்ற பிரதமர் அதனை மீறிய செயலாகி விடும் என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைஸி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியும், கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளையை மத்திய அரசு 3 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இந்த நிகழ்ச்சியில் 5-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார் என ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்க ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் ஒவைஸி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஒவைஸி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை விழாவில் பங்கேற்பது அரசியல் சட்டத்தின் கீழ் பதவியேற்ற பிரதமர் அதனை மீறிய செயலாகி விடும். மதச்சார்பற்ற தன்மைதான் அரசியல் சாசனத்தின் அடிப்படை’’ எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT