Published : 28 Jul 2020 04:21 PM
Last Updated : 28 Jul 2020 04:21 PM

தேர்தல் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் ஆளுநர் கருத்து: தேர்தல் ஆணையம் கடும் எதிர்ப்பு

ஜம்மு காஷ்மீரில் தொகுதி வரையறைக்குப் பின்னர் தேர்தல் நடைபெறுவதாக வெளியான தகவல் குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது:

ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் ஜி.சி.முர்முவை மேற்கோள் காட்டி, தொகுதி வரையறைக்குப் பின்னர் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் என செய்தி வெளியானது.

இதுபோன்ற அறிக்கைகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஆட்சேபம் தெரிவித்துள்ளது. தேர்தல் நேரம் உள்ளிட்ட அரசியல் சாசன விஷயங்கள் முற்றிலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் வரம்புக்கு உட்பட்டது என துணைநிலை ஆளுநருக்கு நினைவூட்ட விரும்புவதாக அது கூறியுள்ளது. தேர்தல் தேதியை நிர்ணயிப்பதற்கு முன்பாக, தேர்தல் நடத்தும் இடத்தின் சூழல், வானிலை, பிராந்திய, உள்ளூர் திருவிழாக்களால் ஏற்படும் பிரச்சினைகள் உள்ளிட்ட அனைத்து பொருத்தமான அம்சங்களையும் ஆணையம் கவனத்தில் கொள்ளும்.

உதாரணத்துக்கு, தற்போதைய நிலையில், கோவிட்-19 தொற்றுப் பரவல், புதிய கோணத்தில் பரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்போதைய நிலையில், தொகுதி வரையறை விஷயமும் முடிவெடுப்பதில் முக்கிய அம்சமாக இருக்கும். இதேபோல, மத்தியக் காவல் படைகளை அனுப்புவதற்கான போக்குவரத்துக்கு ரயில் பெட்டிகள் மற்றும் படைகளின் தயார் நிலை ஆகியவையும் முக்கிய அம்சங்களாகும்.

சம்பந்தப்பட்ட அனைவருடனும் உரிய ஆலோசனைகள் மேற்கொண்டு, விரிவாக மதிப்பீடு செய்த பின்னரே, மூத்த அதிகாரிகள் பல்வேறு விஷயங்களை கவனத்தில் கொள்வார்கள். தேர்தல் நடைபெறவுள்ள மாநிலத்துக்கு தேர்தல் ஆணையம் பயணம் மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட அனைத்து பிரிவினருடனும் விரிவான ஆலோசனைகளை நடத்தும். தேர்தல் ஆணையத்தின் அரசியல் சாசன உரிமையில் தலையிடுவதற்கு ஒப்பானது என்பதால், தேர்தல் ஆணையம் தவிர பிற அதிகார அமைப்புகள், இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்ப்பது முறையாக இருக்கும்.
இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x