Published : 27 Jul 2020 04:44 PM
Last Updated : 27 Jul 2020 04:44 PM

ராஜஸ்தான் சட்டப்பேரவையை கூட்ட ஆளுநர் கல்ராஜ் மிஷ்ரா ஒப்புதல்

ராஜஸ்தான் சட்டப்பேரவையை கூட்ட பரிந்துரைத்த அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கல்ராஜ் மிஷ்ரா ஒப்புதல் கொடுத்துள்ளார்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் முதல்வராக இருக்கும் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது. பாஜகவுடன் இணைந்து ஆளும் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக முதல்வர் அசோக் கெலாட்டும், அவரது ஆதரவாளர்களும் சச்சின் பைலட் மீது குற்றம்சாட்டினர்.

சமீபத்தில் நடந்த இரு காங்கிரஸ் கூட்டங்களில் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் கலந்துகொள்ளாததால், சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. மேலும், அவரையும், ஆதரவு எம்எல்ஏக்களையும் தகுதிநீக்கம் செய்வது தொடர்பாக மாநில சட்டப்பேரவைத் தலைவர் சி.பி. ஜோஷி நோட்டீஸும் வழங்கினார்.

இதற்கு எதிராக ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் சச்சின் பைலட் சார்பில் தொடர்ந்த வழக்கில், சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இந்நிலையில் பெரும்பான்மையில்லாத அரசு என்று அசோக் கெலாட் அரசை பாஜக விமர்சித்து வருகிறது. இதையடுத்து, சட்டப்பேரவையைக் கூட்டி தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடிவு செய்த முதல்வர் அசோக் கெலாட், ஆளுநரிடம் பேரவையைக் கூட்ட அரசு சார்பில் கடிதம் அனுப்பினார்.

இந்தக் கடிதத்தை ஆய்வுசெய்த ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, அசோக் கெலாட்டின் கடிதத்தை திருப்பி அனுப்பினார். கெலாட் அனுப்பிய 2-வது கடிதத்தையும் அவர் திருப்பி அனுப்பினார்.

இதனையடுத்து இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அசோக் கெலாட் தான் பிரதமர் மோடியுடன் பேசியதாகவும் ஆளுநரின் நடவடிக்கை குறித்து அவரிடம் முறையிட்டதாகவும் கூறினார்.

இந்தநிலையில், ஆளுநர் சட்டப்பேரவையை கூட்ட ஒப்புதல் கொடுத்துள்ளார்.
ராஜஸ்தான் சட்டப்பேரவையை கூட்ட பரிந்துரைத்த அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கல்ராஜ் மிஷ்ரா ஒப்புதல் கொடுத்துள்ளார்.

சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த கூடாது என்பது தனது நோக்கம் அல்ல என்றும் ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் இது கரோனா காலம் என்பதால் தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனக் கூறியுள்ளார். எம்எல்ஏக்கள் கூட்டத்தொடரில் பங்கேற்க 21 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x