Last Updated : 27 Jul, 2020 12:38 PM

 

Published : 27 Jul 2020 12:38 PM
Last Updated : 27 Jul 2020 12:38 PM

சட்டப்பேரவையைக் கூட்டக் கோரி ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அனுப்பிய 2-வது கடிதம்: ஆளுநர் திருப்பி அனுப்பினார்

ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, முதல்வர் அசோக் கெலாட்: படம் | ஏஎன்ஐ.

ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் சட்டப்பேரவையைக் கூட்டக் கோரி முதல்வர் அசோக் கெலாட் அனுப்பிய 2-வது கோரிக்கைக் கடிதத்தையும், ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா பல்வேறு சந்தேகங்களை எழுப்பியும், விளக்கம் கேட்டும் திருப்பி அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் அசோக் கெலாட் ஏற்கெனவே முதல் முறை கடிதம் அனுப்பி பேரவையைக் கூட்டக் கோரினார், ஆனால், 6 கேள்விகள் கேட்டு விளக்கம் அளிக்கக் கோரி அந்தக் கடிதத்தை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் 2-வது கடிதத்தையும் அசோக் கெலாட் அனுப்பியுள்ளார்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் முதல்வராக இருக்கும் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது. பாஜகவுடன் இணைந்து ஆளும் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக முதல்வர் அசோக் கெலாட்டும், அவரது ஆதரவாளர்களும் சச்சின் பைலட் மீது குற்றம்சாட்டினர்.

சமீபத்தில் நடந்த இரு காங்கிரஸ் கூட்டங்களில் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் கலந்துகொள்ளாததால், சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. மேலும், அவரையும், ஆதரவு எம்எல்ஏக்களையும் தகுதிநீக்கம் செய்வது தொடர்பாக மாநில சட்டப்பேரவைத் தலைவர் சி.பி. ஜோஷி நோட்டீஸும் வழங்கினார்.

இதற்கு எதிராக ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் சச்சின் பைலட் சார்பில் தொடர்ந்த வழக்கில், சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இந்நிலையில் பெரும்பான்மையில்லாத அரசு என்று அசோக் கெலாட் அரசை பாஜக விமர்சித்து வருகிறது. இதையடுத்து, சட்டப்பேரவையைக் கூட்டி தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடிவு செய்த முதல்வர் அசோக் கெலாட், ஆளுநரிடம் பேரவையைக் கூட்ட அரசு சார்பில் கடிதம் அனுப்பினார்.

இந்தக் கடிதத்தை ஆய்வுசெய்த ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, அசோக் கெலாட்டின் கடிதத்தை திருப்பி அனுப்பினார்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்: கோப்புப் படம்.

மேலும் ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “ராஜஸ்தான் அரசு அனுப்பிய அந்தக் கடிதத்தில் சட்டப்பேரவையை எந்தத் தேதியில் கூட்ட வேண்டும் என்ற குறிப்பு ஏதும் இல்லை.

எந்த அடிப்படையில் சட்டப்பேரவையைக் கூட்டுகிறோம், அதற்கு அமைச்சரவை ஒப்புதல் ஏதும் இருக்கிறதா என்பது குறித்த தகவலும் அதில் இல்லை.

சட்டப்பேரவையைக் கூட்டுவதற்கான எந்தவிதமான நியாயமான காரணமும், எந்தத் திட்டமும் அந்தக் கடிதத்தில் இல்லை.

பொதுவாக சட்டப்பேரவையைக் கூட்டுவதற்கு கடிதம் வழங்கியபின் 21 நாட்கள் வரை கட்டாயம் காத்திருக்க வேண்டும். பெரும்பான்மை இருக்கும் பட்சத்தில் எதற்காக சட்டப்பேரவையைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து 2-வது முறையாக முதல்வர் அசோக் கொலாட் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவுக்குக் கடிதம் எழுதினார். அதில் சட்டப்பேரவையை வரும் 31-ம் தேதி கூட்டுங்கள். பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்தக் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, இந்தக் கடிதத்தில் பல்வேறு கேள்விகளையும், விளக்கங்களையும் கேட்டு மீண்டும் முதல்வர் அசோக் கெலாட்டுக்குத் திருப்பி அனுப்பியுள்ளார் என்று ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ராஜஸ்தான் அரசு வட்டாரங்கள் கூறுகையில், “சட்டப்பேரவையைக் கூட்டக் கோரி முதல்வர் கெலாட் அனுப்பிய 2-வது கடிதத்தையும் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா சில விளக்கங்கள் கேட்டு, திருப்பி அனுப்பிவிட்டார்” எனத் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x