டெல்லி அரசு இல்லத்தைக் காலி செய்யும் பிரியங்கா காந்தி: பாஜக எம்.பி. அனில் பலூனிக்கு தேநீர் விருந்தளிக்க அழைப்பு 

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்க காந்தி: கோப்புப் படம்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்க காந்தி: கோப்புப் படம்.
Updated on
2 min read

டெல்லியில் உள்ள லோதி எஸ்டேட் பகுதியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தான் தங்கியிருக்கும் அரசு இல்லத்தை வரும் ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் காலி செய்ய இருக்கும் நிலையில், அந்த வீடு ஒதுக்கப்பட்டு இருக்கும் பாஜக எம்.பி.யும் ஊடகப்பிரிவுத் தலைவருமான அனில் பலூனியை தேநீர் விருந்துக்கு முறைப்படி அழைத்துள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு விலக்கப்பட்டு, சிஆர்பிஎப் இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியது.

''எஸ்பிஜி பாதுகாப்பு விலக்கப்பட்டு, இசட் பிளஸ் பாதுகாப்பாகக் குறைக்கப்பட்ட ஒருவருக்கு அரசின் சார்பில் வீடு வழங்குவதற்கு சட்டத்தில் இடமில்லை.

ஆதலால், டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ள எண் 35, 5பி இல்லத்தை பிரியங்கா காலி செய்ய வேண்டும். ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் வீட்டைக் காலி செய்து தர வேண்டும். இல்லாவிட்டால் அபராதம் அல்லது வாடகை வசூலிக்கப்படும்'' என மத்திய வீட்டுவசதி மற்றும் நகர விவகாரத்துறை கடந்த 1-ம் தேதி உத்தரவிட்டது.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு இந்த வீடு கடந்த 1997-ம் ஆண்டு மத்திய அரசால் ஒதுக்கப்பட்டது. ஏறக்குறைய 23 ஆண்டுகள் இந்த இல்லத்தில் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் பிரியங்கா காந்தி தான் தங்கியிருக்கும் வீட்டைக் காலி செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டார். டெல்லியில் தங்கிக்கொள்ள குருகிராமில் செக்டர் 42 பகுதியில் தனியாக வீடு ஒன்றைத் தற்காலிகமாக பிரியங்கா காந்தி வாடகைக்கு எடுத்துள்ளார்.

பிரியங்கா காந்தி தங்கியிருந்த அரசு இல்லம், அவருக்குப் பின் பாஜக தேசிய ஊடகப்பிரிவு தலைவரும், எம்.பி.யுமான அனில் பலூனிக்கு மத்திய வீட்டுவசதித்துறை ஒதுக்கியது.

பாஜக எம்.பி. அனில் பலூனி : கோப்புப்படம்
பாஜக எம்.பி. அனில் பலூனி : கோப்புப்படம்

இந்நிலையில் தான் தங்கியிருந்த வீட்டுக்குப் புதிதாக குடியேற இருக்கும் பாஜக எம்.பி. அனில் பலூனிக்கு தேநீர் விருந்தளிக்க பிரியங்கா காந்தி கடிதம் மூலம் அழைப்பு விடுத்தார். அவரின் அலுவலகத்துக்கும் தொடர்புகொண்டு அழைப்பு விடுத்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுவரை அனில் பலூனியிடம் இருந்து எந்தத் தகவலும் பிரியங்கா காந்திக்கு வரவில்லை.

மத்திய அரசு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வீட்டைக் காலி செய்ய பிரியங்கா காந்தி தயாராக இருக்கிறார். அதற்கு முன்னதாக, அந்த வீட்டில் குடியேற இருக்கும் அனில் பலூனிக்கு வீடு சவுகரியமாக இருக்கிறதா, அல்லது ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டுமா என்று கேட்டுத் தெரிந்துகொள்ளவும், பரஸ்பர மரியாதை, நட்புக்காகவும் மட்டுமே தேநீர் விருந்தளிக்க பிரியங்கா காந்தி அழைத்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in