கரோனா பாதிப்பால் அச்சப்பட வேண்டாம்: ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவுரை

கரோனா பாதிப்பால் அச்சப்பட வேண்டாம்: ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவுரை
Updated on
1 min read

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டால் அச்சமடைய வேண்டிய அவசியமில்லை என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கரோனா பாதிப்பு இருப்பது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, போபாலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், தனது உடல்நிலை குறித்து சவுகான் ட்விட்டரில் நேற்று கூறியிருப்பதாவது:

கரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதை தவிர்க்க என்னால் இயன்ற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முறையாக பின்பற்றி வந்தேன். இருந்தபோதிலும், எனக்கு இந்த தொற்று பரவிவிட்டது. ஒரு சிறிய கவனக்குறைவுகூட கரோனா வருவதற்கு காரணமாகி விடும். எனவே, மத்திய பிரதேச மக்கள் அனைவரும் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுவிட்டால் யாரும் அச்சமடைய வேண்டிய அவசியமில்லை. உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டால் விரைவில் குணமடைந்துவிடலாம் என அந்தப் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in