விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது அல்ல தேர்தல் ஆணையம்: பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி அறிக்கை

விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது அல்ல தேர்தல் ஆணையம்: பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி அறிக்கை
Updated on
2 min read

அரசியல் சட்டத்தால் உருவாக்கப் பட்டது என்பதால் மட்டுமே தேர்தல் ஆணையம் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது அல்ல என்று பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி வெள்ளிக்கிழமை கூறி யுள்ளார்.

இதுகுறித்து ஜேட்லி விடுத் துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: அரசியல் சட்டத்தால் உருவாக்கப்பட்டது என்பதால் மட்டும் ஒரு அமைப்பு விமர்சனத் துக்கு அப்பாற்பட்டது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. தவறு என்பது மனித இயல்பு. விமர்சனம் என்பது தவறிழைத்த அமைப்பும் அங்கு எதிர்காலத்தில் பதவிக்கு வரக்கூடியவர்களும் தவறு செய்யாமல் இருப்பதற்கான எச்சரிக்கையாகும்.

நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம், பிரதமர், அமைச் சரவை, நாடாளுமன்றம், தலைமைக் கணக்கு அதிகாரி அலுவலகம் ஆகியவை அரசியல் சட்டத்தால் உருவாக்கப்பட்டவை. அவற்றைத் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது தெரிவு செய்யப்பட்ட நபர்கள் நிர்வகிக்கின்றனர். அப்படிப்பட்டவர்கள் மாபெரும் தவறுகள் செய்ததை வரலாறு கண்டுள்ளது.

இங்கிலாந்தில் நீதிமன்றத் தீர்ப்புகளை விமர்சிக்கலாம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். நீதி என்பது தொடர்ந்து கண்காணிக்கப் படவேண்டும். ‘‘நீதிபதிகள் தவறு இழைக்க லாம், எனவே அவர்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியுள்ளது” என்று புகழ்பெற்ற பிரிட்டிஷ் நீதிபதி லார்ட் டென்னிங்ஸ் கூறியுள்ளார். இந்திய நீதிபதிகளும் தங்களது முடிவுகளை விமர்சிக்க லாம் என்றும் ஆனால் நீதிபதிக்கு உள்நோக்கம் கற்பிக்கப் படக்கூடாது என்றும் கூறியுள்ளனர்.

இங்கிலாந்தில் மூன்று நீதிபதிகள் தலைகீழாகத் தொங்குவதைப் போன்று ஒரு ஆங்கிலப் பத்திரிகை புகைப்படம் வெளியிட்டு, மூன்று கிழட்டு முட்டாள்கள் என்று அதற்கு தலைப்பு கொடுத்திருந்தது. ஆனால், பிரிட்டிஷ் பிரபுக்கள் சபை இதற்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க மறுத்தன. அவர்களில் ஒரு நீதிபதி பின்னர் கூறும்போது, “அது எப்படி அவமதிப்பாகும்? நான் கிழவன் தான். என்னுடைய ஞானம் ஒருவரின் கருத்துதான்”என்று கூறினார்.

அவசர நிலைக் காலத்தில், ஆட்கொணர்வு மனு ஒன்றின்மீது வழங்கப்பட்ட தீர்ப்பையும், விமர்சனங்களையும் முன்னணிப் பத்திரிகையாசிரியர்களான எஸ்.முல்கோங்கர், ஷ்யாம்லால் ஆகியோர் விமர்சித்திருந்தனர். நீதிமன்றத்துக்கு துணிச்சல் இல்லை என்று கூறிய அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்புக் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் வழக்கு விசாரணைக்குப் பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்களின் நோக்கம் நீதியமைப்பை வலுப்படுத்துவதுதானே தவிர, வலுவிழக்கச் செய்வதல்ல என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

கடந்த காலத்தில், நடுநிலையாக செயல்படவில்லை என்று தேர்தல் ஆணையர் ஒருவருக்கு எதிராக நான் பிரச்சாரம் மேற்கொண்டேன். நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மனு ஒன்றின் மீது, தலைமை தேர்தல் ஆணையர் அறிக்கை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். எனது குற்றச்சாட்டு சரிதான் என்று அவர் கூறினார். ஆனால் அதன்மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பது வேறு விஷயம்.

பிரதமர்கள், அமைச்சர்கள், சபாநாயகர்கள் மற்றும் அவர் களின் தீர்ப்புகள் தொடர்ந்து விமர்சிக்கப்படுகின்றன. நாடாளு மன்ற உறுப்பினர்களும், தலைமைக் கணக்கு ஆணையர் கூட விட்டு வைக்கப்படுவதில்லை. அரசியல் சட்டத்தால் ஏற்படுத்தப் பட்ட அமைப்பு என்பதால் விமர் சனத்துக்கு அப்பாற்பட்டது என்று எங்கே கூறப்பட்டுள்ளது?தேர்தல் ஆணையம் என்பது அரசியல் சட்டத்தால் உருவாக்கப்பட்டது என்பதால் மட்டும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது அல்ல. மோடி பிரச்சாரத்துக்கு அனுமதி மறுக்கப் பட்டது குறித்து சரியான பதிலடியை வாரணாசி மக்கள் பிரமாண்டப் பேரணியின் மூலமாகக் கொடுத்துவிட்டனர்.

காங்கிரஸால் தாங்க முடியவில்லை

நரேந்திர மோடி தன்னை பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்று கூறியிருப்பது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் எப்போதும் தன்னுடைய சாதியைப் பற்றிக் கூறிக் கொண்டதில்லை.

ஒரு சாதாரண மனிதரிடம் தோற்றுப் போவது குறித்து காங்கிரஸ் கட்சியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. முன்னதாக டீ விற்பவர் என்று அவர்கள் பிரச்சாரம் செய்தது அவர்களையே திருப்பித் தாக்கியது.

தற்போது குஜராத் காங்கிரஸ் தலைவரான சக்தி சிங் கோஹில், மோடி தனது சாதியை பிற்படுத்தப்பட்டவர் பட்டியலில் சேர்த்தது பாவச்செயல் என்று கூறியுள்ளார்.

பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டி யலில் ஒவ்வொரு சாதியையும் சேர்க்கும்போது பாவப்பட்டதாக காங்கிரஸ் கருதுகிறதா? எப்படிப் பார்த்தாலும்‘மோத் காஞ்ச்சி’சாதி குஜராத்தில் சபீர்தாஸ் மேத்தா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 1994 ஜூலை 25 அன்று பிற்படுத்தபட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டு, பின்னர் மண்டல் கமிஷன் பட்டியலில் ஏப்ரல் 4, 2000-ல் சேர்க்கப்பட்டது. இவை இரண்டும் குஜராத்தில் நரேந்திர மோடி முதலமைச்சராவதற்கு முன்பே நடந்ததாகும்.

இவ்வாறு அருண்ஜேட்லி தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in