Published : 25 Jul 2020 08:25 PM
Last Updated : 25 Jul 2020 08:25 PM

அசோக் கெலோட் மீது நடவடிக்கை தேவை: ஆளுநரை சந்தித்து பாஜக மனு

ஜெய்ப்பூர்

ராஜஸ்தானில் ஆளுநருக்கு எதிராக மக்களை தூண்டிவிடும் வகையில் பேசிய முதல்வர் அசோக் கெலோட் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜகவினர் ஆளுநரிடம் மனு அளித்தனர்.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலோட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இதனிடையே, அங்கு துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட், பாஜகவுடன் இணைந்து ஆளும் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக முதல்வர் அசோக் கெலாட்டும், அவரது ஆதரவாளர்களும் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், அங்கு அண்மையில் நடைபெற்ற இரண்டு காங்கிரஸ் கூட்டங்களில் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் கலந்துகொள்ளவில்லை. இதனைக் காரணம் காட்டி, சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. மேலும், அவர்களை தகுதிநீக்கம் செய்வது தொடர்பாக மாநிலசட்டப்பேரவைத் தலைவர் சி.பி. ஜோஷி நோட்டீஸும் வழங்கினார்.

இதற்கு எதிராக ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் சச்சின் பைலட் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்தது. சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் எனவும், ராஜஸ்தான் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் வழக்கில் மத்திய அரசை ஒரு தரப்பாக சேர்க்கவும் அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த உத்தரவால் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 19 பேர் மீது சபாநாயகர் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் முதல்வர் அசோக் கெலோட் ராஜ்பவனுக்கு சென்றார். ராஜ்பவனுக்கு வெளியே எம்எல்ஏக்கள் அணி வகுத்தனர்.

பின்னர் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை முதல்வர் கெலோட் மட்டும் சந்தித்து பேச அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர் அவர் சந்தித்து பேசினார். அப்போது சட்டப்பேரவையை க் கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். தொடர்ந்து 4 மணிநேரம் ராஜ்பவனில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போாரட்டம் நடத்தினர். இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆளுநரும் கண்டித்துள்ளார்.

இந்தநிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மீண்டும் நடைபெற்றது. கூட்டத்திற்கு அப்போது அசோக் கெலோட் கூறியதாவது:

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் பாஜகவின் சதியை நிறைவேற அனுமதிக்க மாட்டேன். தேவைப்பட்டால் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு கூட செல்வேன். பிரதமர் வீட்டிற்கும் செல்ல தயாராக உள்ளேன். எங்களுக்கு மக்கள் ஆதரவு உள்ளது. காங்கிரஸ் தொடர்ந்து மாநிலத்தை ஆளும்.’’ எனக் கூறினர்.

ராஜஸ்தானில் ஆளுநருக்கு எதிராக மக்களை தூண்டிவிடும் வகையில் பேசிய முதல்வர் அசோக் கெலோட் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜகவினர் ஆளுநரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து பாஜக மாநில தலைவர் பூனியா கூறுகையில் ‘‘ஒரு முதல்வர் எப்படி செயல்படக்கூடாது என்பதற்கு கெலோட் உதாரணம். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரை வலியுறுத்தியுள்ளோம். ஆளுநருக்கு எதிராக மக்களை தூண்டுவிடும் செயலில் முதல்வர் ஈடுபடுவதை ஏற்க முடியாது.’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x