Last Updated : 25 Jul, 2020 06:57 PM

 

Published : 25 Jul 2020 06:57 PM
Last Updated : 25 Jul 2020 06:57 PM

உ.பி.யின் நொய்டா போக்குவரத்து பணியில் முதன்முறையாக பெண் காவலர்கள்: அமர்த்திய தமிழரான ஐபிஎஸ் அதிகாரிக்கு குவியும் பாராட்டுகள்

புதுடெல்லி

உத்திரப்பிரதேசத்தின் நொய்டா போக்குவரத்து பணியில் முதன்முறையாக பெண் காவலர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். இதை அமர்த்திய தமிழரான ஐபிஎஸ் அதிகாரி ராஜேஷ்க்கு பாராட்டுகள் குவிகின்றன.

நாட்டின் தலைநகரான டெல்லியின் புறநகரமாக அமைந்திருக்கும் கவுதம்புத் நகர் மாவட்டத்தின் முக்கிய நகரம் நொய்டா. இங்கு ஏராளமான ஐ.டி தொழில் நிறுவனங்களும், கல்லூரி, பல்கலைகழகங்களும் நிறைந்துள்ளன.

மிகவும் படித்தவர்கள் பணியாற்றும் இவைகளில் ஆண், பெண் சமஉரிமைகளை பேணும் வகையில் பெண்கள் அதிகமாகப் பணியாற்றுகின்றனர். எனினும், அந்நகரின் போக்குவரத்து பணிகளில் உபி காவல்துறை சார்பில் இதுவரை ஒரு பெண் காவலரும் அமர்த்தப்பட்டதில்லை.

இந்த பின்தங்கிய நிலையை மாற்றும் வகையில் நொய்டாவில் முதன்றையாக போக்குவரத்து கட்டுப்படுத்தும் பணிகளில் பெண் காவலர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் உபி காவல்துறையில் போக்குவரத்து பிரிவில் இருந்தாலும் அதன் எழுத்தர் போன்ற வேறு சில வேலைகளை செய்து வந்தனர்.

இந்த நிலையை மாற்றும் வகையில் தற்போது நொய்டாவில் சங்கீதா(27), அருணா(26), பிரியங்கா(30), நீலம்(34) அந்திம் (29) மற்றும் அக்‌ஷிதா(29) ஆகியக் காவலர்கள் போக்குவரத்து கட்டுப்படுத்தும் பணியில் இறக்கி விடப்பட்டுள்ளனர். இதற்கு டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற மாநிலங்களில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த பணியை பாராட்டி அவர்களை அமர்த்திய போக்குவரத்து துணை ஆணையர் சு.ராஜேஷ்க்கு சமூகவலைதளங்களிலும் பாராட்டுக்கள் குவிகின்றன.

இதுகுறித்து ’இந்து தமிழ் திசை’ இணையத்திடம் தமிழரான சு.ராஜேஷ் கூறும்போது, ‘நம் சமூகம் பெண்களை மதிக்கக் கூடியது. இதனால், போக்குவரத்தை கட்டுப்படுத்துவதில் பெண் காவலர்களுக்கு அதிக பொதுமக்களிடம் அதிக ஒத்துழைப்பு கிடைக்கும் எனக் கருதுகிறேன்.

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களை போல் அன்றி இங்கு இப்பணியில் பெண்கள் அமர்த்தப்படாமல் இருந்தது ஏன்? எனத் தெரியவில்லை. இவர்கள், பணியில் இறங்கிய இரண்டாவது நாளே நல்ல பலன் கிடைத்துள்ளதால் மேலும் கூடுதலாகப் பெண் காவலர்களை அமர்த்தும்படி எனது உயர் அதிகாரிகளுக்கு எழுத உள்ளேன்.’3 எனத் தெரிவித்தார்.

உ.பி.யின் பெரும்பாலான நகரங்களில் இன்னும் சாலை போக்குவரத்து முறையான சிக்னல் விளக்குகளுடன் முறைப்படுத்தப்படாமல் உள்ளன. இதனால், அவற்றில் போக்குவரத்து கட்டுப்படுத்தும் பணியில் பெண் காவலர்கள் பணிசெய்வது என்பது அரிதான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

நொய்டாவின் உ.பி. காவல்துறையின் போக்குவரத்து பிரிவில் மொத்தம் உள்ள 406 காவலர்களில் 6 பெண்கள் உள்ளனர். இதன் அருகிலுள்ள டெல்லியில் சுமார் 2,000 போக்குவரத்து காவலர்கள் இருந்தும் மிகக் குறைவான எண்ணிக்கையில் அப்பணியில் பெண்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x