

கேரளாவில் ஐக்கிய அரபு அமீரகம் தூதரகத்தின் பெயரைப் பயன்படுத்தி 30 கிலோ தங்கம் கடத்தியது தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷின் வங்கி லாக்கரில் இருந்து ரூ. 1 கோடி ரொக்கப்பணம், ஏறக்குறைய ஒரு கிலோ தங்க நகைகளை தேசிய புலனாய்வுப் பிரிவினர் பறிமுதல் செய்தனர்
மேலும், ஸ்வப்னா சுரேஷ் தவிர குற்றச்சாட்டுக்கு ஆளாகி கைதாகியுள்ள சரித் குமார், சந்தீப் நாயர் உள்பட மூவருக்கும் ஆகஸ்ட் 21-ம் தேதிவரை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் என்ஐஏவுக்கு அனுமதியளித்தது.
கேரளாவில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தைப் பயன்படுத்தி கடத்தப்பட்ட 30 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் கடந்த 5-ம் தேதி பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அந்த தூதரகத்தின் முன்னாள் ஊழியர் சரித் குமார் என்பவரைக் கைது செய்தனர். பின்னர் அந்த வழக்கு என்ஐஏ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
சரித் குமார் அளித்த தகவலின்படி, முக்கியக் குற்றவாளியாகக் கூறப்படும் ஸவப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை என்ஐஏ அமைப்பினர் கைது செய்தனர்.
இதில் முக்கியக் குற்றவாளியாகக் கூறப்படும் ஸ்வப்னா சுரேஷ் ஐக்கிய அரபு அமீரக தூதரத்தின் முன்னாாள் ஊழியர் ஆவார். மேலும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப துறையில் விற்பனை மேலாளராகாக ஒப்பந்த அடிப்படையில் இருந்தபோதுதான் இந்த குற்றச்சாட்டில் சிக்கினார்.
இவர்கள் மூவரையும் என்ஐஏ அமைப்பின் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். இவர்கள் மூவரையும் விசாரிக்க என்ஐஏ அமைப்புக்கு சிறப்பு நீதிமன்றம் அளித்த காலக்கெடு நேற்றுடன் முடிந்துவிட்டதால் மூவரையும் நேற்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது நீதிமன்றத்தில் ரிமாண்ட் அறிக்கையை என்ஐஏ அமைப்பினர் தாக்கல் செய்தனர் .
அந்த அறிக்கையில், “ ஸ்வப்னா சுரேஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பல்வேறு வங்கிகளில் உள்ள லாக்கரில் பணமும், நகைகளையும் மறைத்து வைத்திருப்பதாகத் தெரிவித்தார்.
அதன்அடிப்படையில் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு வங்கியில் ஸ்வப்னா சுரேஷ் லாக்கரில் வைத்திருந்த ரூ.36.50 லட்சம் பணம், ஸ்வப்னாவுக்கு சொந்தமான மற்றொரு வங்கி லாக்கரில் இருந்து ரூ.64 லட்சம் பணம், ஒரு கிலோ தங்க நகை ஆகியவற்றை கடந்த 23ம் தேதி பறிமுதல் செய்துள்ளோம்.
குற்றம்சாட்டப்பட்ட சந்தீப் நாயர், ஸ்வப்னா இருவரையும் ஜமீனில் அனுப்பினால், ஆதாரங்களை அழிக்க நேரிடும், தலைமறைவாகிவிடுவார்கள். விசாரணையில் பெரும் பின்னடைவைச் சந்திக்கலாம்.
மேலும், ஸ்வப்னா சுரேஷிடம் இருந்து பல்வேறு டிஜி்ட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் அவரிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. இதில் சர்வதேச அளவில் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்று விசாரிக்க இருக்கிறோம். ஆதலால், இன்னும் கூடுதலாக நாட்கள் விசாரணைக்கு எடுக்க அனுமதிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தனர்.
தேசிய புலனாய்வு அமைப்பின் அறிக்கையைப் பரிசீலித்த சிறப்பு நீதிமன்றம் ஆகஸ்ட் 21-ம் தேதிவரை சந்தீப் நாயர், ஸ்வப்னா சுரேஷை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்தது.
முன்னதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகிய 3 பேரின் என்ஐஏ காவல் நேற்று முடிந்தநிலையில், தங்கம் கடத்தல் தொடர்பாக விசாரித்து வரும் சுங்கத்துறையினர் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து, மூவரையும் முறைப்படி கைது செய்ய அனுமதி கோரினார். அதற்கு நீதிமன்றம் ஒப்புதல் அளித்ததையடுத்து, ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயரை முறைப்படி சுங்கத்துறையினர் கைது செய்தனர். இருப்பினும் அவர்கள் என்ஐஏ காவலுக்கு அனுப்பப்பட்டனர். என்ஐஏ காவல் முடிந்ததும், சுங்கத்துறையினர் தனியாக விசாரிப்பார்கள்.
ஸவப்னா சுரேஷ் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவை வரும் 29-ம் தேதிக்கு சிறப்பு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.