Last Updated : 25 Jul, 2020 08:54 AM

 

Published : 25 Jul 2020 08:54 AM
Last Updated : 25 Jul 2020 08:54 AM

உ.பி.யின் கான்பூரில் ரூ.30 லட்சத்துக்காக கடத்தப்பட்ட இளைஞர் கொலை: 5 பேர் கைது, 11 போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம்

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரின் பாரா காவல் நிலையப் பகுதிவாசியான ஜமன்லால் சிங்கின் மகன் சஞ்சீத் யாதவ் (28). கடந்த மாதம் 22-ம் தேதி மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். இவரை மீட்க கேட்கப்பட்ட ரூ.30 லட்சத்தை கடத்தல்காரர்களிடம் பாரா காவல் நிலையத்தார் முன்னிலையில் ஒப்படைத்ததாக செய்திகள் வெளியானது. ஆனால் இதை கான்பூர் போலீஸார் மறுத்திருந்தனர். இந்த செய்தி கடந்த 16-ம் தேதி ‘இந்து தமிழ்’ நாளேட்டிலும் வெளியானது.

இந்நிலையில், தங்கள் நண்பர்களாலேயே சஞ்சீத் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கொலை செய்த பிறகு சஞ்சீத்தை ஒப்படைக்க அவரது குடும்பத்தாரிடம் ரூ.30 லட்சம் பிணையத்தொகை கேட்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் கியானேந்தர் யாதவ், குல்தீப் கோஸ்வாமி, ராம்ஜி சுக்லா ஆகியோருடன் நீலு சிங் மற்றும் பிரீத்தி சர்மா ஆகிய இரு பெண்களும் கைதாகி உள்ளனர்.

இந்த வழக்கில் நேரடியாக தலையிட்டு விசாரித்த தமிழரும் கான்பூர் மாவட்ட காவல் துறையின் மூத்த கண்காணிப்பாளருமான பி.தினேஷ்குமார், ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறும்போது, "சஞ்சீத்துக்கு போதை மருந்து கொடுத்து தனியாக ஒரு அறையில் மயக்கநிலையில் மறைத்து வைத்திருந்தனர். கடந்த மாதம் 26-ம் தேதி தப்ப முயன்ற சஞ்சீத் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டுள்ளார். கான்பூரின் பாண்டு நதியில் வீசப்பட்ட அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது" என்றார்.

இதனிடையே சஞ்சீத் காணாமல்போன மறுநாள் அளிக்கப்பட்ட புகார் குறித்தும் அவர் கடத்தப்பட்டது குறித்தும் முறையாக விசாரிக்காத கான்பூர் காவல் துறையை சேர்ந்த ஏஎஸ்பி அபர்னா குப்தா ஐபிஎஸ், டிஎஸ்பி மனோஜ் குப்தா, ஆய்வாளர் ரஞ்சீத் ராய், துணை ஆய்வாளர் ராகேஷ் குமார் உள்ளிட்ட 11 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவின் பேரில் எஸ்எஸ்பி தினேஷ்குமார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

கான்பூரில் 8 போலீஸாரை சுட்டுக்கொன்ற ரவுடி விகாஸ் துபே வழக்கை அடுத்து தற்போது இளைஞர் கடத்திக் கொலை செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மாநில எதிர்கட்சித் தலைவர்கள் அங்கு ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளனர். குறிப்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் நடத்துவது குண்டர்கள் ஆட்சி என முன்னாள் முதல்வர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x