

லக்னோ: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர் அத்வானி லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று வாக்குமூலம் அளித்தார்.
கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 32 பேர் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். இந்த வழக்கு உத்தரபிரதேசத்தின் லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தினசரி விசாரணை நடத்தி வருகிறது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் தங்கள் தரப்பு கருத்தை தெரிவிக்கும் வகையில் அவர்களது வாக்குமூலங்களை நீதிமன்றம் பதிவு செய்து வருகிறது. இதன்படி, லக்னோ நீதிமன்றத்தின் முன்பு காணொலிக் காட்சி மூலம் அத்வானி நேற்று ஆஜரானார். நீதிபதி எஸ்.கே. யாதவ் முன்னிலையில் அவர் வாக்குமூலம் அளித்தார். அவரது வாக்குமூலத்தை நீதிபதி பதிவு செய்து கொண்டார்.
நேற்று முன்தினம் மற்றொரு பாஜக மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷி லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார்.