Published : 24 Jul 2020 08:00 AM
Last Updated : 24 Jul 2020 08:00 AM
அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டும் பணி ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான பூமி பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் கோயிலின் தலைமை வடிவமைப்பாளர் சி.சோம்புராவின் மகனும் கட்டிடவடிவமைப்பாளருமான நிகில் சோம்புரா கூறியதாவது:
அயோத்தி ராமர் கோயிலுக்கான வடிவமைப்பு 1988-ல் தயாரிக்கப்பட்டது. தற்போது 30 ஆண்டுகளுக்கு மேல் கடந்துவிட்டது. கோயிலுக்கு வருவதில் மக்கள் ஆர்வமுடன் இருப்பதால் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் கோயிலின் அளவை அதிகரிக்க முடிவுசெய்து, வடிவமைப்பை மாற்றி அமைத்துள்ளோம். இதன்படி கோயிலின் உயரம் 141 அடியில்இருந்து 161 அடியாக அதிகரிக்கிறது. மேலும் 2 மண்டபங்களை கூடுதலாக சேர்த்துள்ளோம்.
முந்தைய வடிவமைப்பின்படி செதுக்கப்பட்ட தூண்கள் மற்றும்கற்கள் அனைத்தையும் பயன்படுத்த உள்ளோம். கோயிலை கட்டி முடிக்க மூன்றரை ஆண்டுகளாகும். பிரதமர் முன்னிலையில் பூமிபூஜை முடிந்தவுடனேயே கட்டுமானப் பணி தொடங்கும். கட்டுமானப் பணி நடக்கும் இடத்துக்கு ‘எல் அண்ட் டி' நிறுவன குழுவினர் தேவையான சாதனங்கள் மற்றும் பொருட்களுடன் ஏற்கெனவே வந்துவிட்டனர். இவ்வாறு நிகில் சோம்புரா கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT