

இமாச்சலப் பிரதேச மாநிலம் கல்கா-சிம்லா இடையிலான மலை ரயிலின் 2 பெட்டிகள் நேற்று தடம் புரண்டதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 2 பேர் பலியா யினர். 14 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஹரியாணா மாநிலம் கல்கா நகரிலிருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்பட்ட ரயில், அடுத்த ஒரு மணி நேரத்தில் இமாச்சலப் பிரதேச மாநிலம் பர்வானூ அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இதில் ஒரு பெண் உட்பட 2 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலியாயினர். காயமடைந்த 14 பேர் பர்வானூவில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
விபத்துக்கு காரணம்
இதுகுறித்து வடக்கு ரயில்வே அதிகாரி நீரஜ் சர்மா டெல்லியில் கூறும்போது, “கல்கா-சிம்லா ரயில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தண்டவாளத்திலோ அல்லது ரயில் பெட்டியிலோ ஏற்பட்ட பிரச்சினையே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என கருதுகிறோம். பாதையின் குறுக்கே விலங்கு வந்ததாலோ அல்லது கற்கள் தண்டவாளத்தின் மீது விழுந்ததோகூட காரணமாக இருக்கலாம்” என்றார்.