Last Updated : 22 Jul, 2020 08:36 PM

 

Published : 22 Jul 2020 08:36 PM
Last Updated : 22 Jul 2020 08:36 PM

எனது கணவரை பயன்படுத்திக் கொண்ட போலீஸாரே அவரை சுட்டுக் கொன்றனர்: விகாஸ் துபே மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு

தனது கணவரை சுட்டுக் கொன்ற போலீஸாரே பிறகு அவரை சுட்டுக்கொன்றதாக விகாஸ் துபேயின் மனைவி பரபரப்பு குற்றம் சுமத்தி உள்ளார். இது குறித்து அவர் உள்ளூர் நாளேட்டிற்கு அளித்த பேட்டியில் கருத்து கூறியுள்ளார்.

கான்பூரின் பிக்ரு கிராமத்தில் 8 போலீஸாரை சுட்டுக் கொன்றவர் உ.பி.யின் ரவுடி விகாஸ் துபே. பிறகு அவரும் கான்பூர் போலீஸாரால் என்கவுன்டர் செய்யப்பட்டார்.

நாடு முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் வழக்கில் விகாஸின் மனைவி ரிச்சா துபே முதன்முறையாக உள்ளூரின் இந்தி நாளேட்டிற்கு பேட்டி அளித்துள்ளார். இதில் அவர் கான்பூர் போலீஸார் மீது பரபரப்பான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

இதில் ரிச்சா துபே கூறும்போது, ‘எனது கணவரை பயன்படுத்திக் கொண்ட போலீஸார் பிறகு சுட்டுத் தள்ளி விட்டது. கரோனா ஊரடங்கு காலத்தில் கான்பூரின் பல போலீஸார் எங்கள் பிக்ரு வீட்டில் மதியம், இரவுகளில் விருந்துண்டு வந்தனர்.

இவர்களில் பலர் இரவுகளிலும் பிக்ரு வீட்டில் தங்குவதை வழக்கமாக்கி இருந்தனர். எனது கணவர் தவறு செய்திருந்தால் சட்டப்படி தண்டனை கிடைக்கும் என நம்பி இருந்தேன்.

எனக்கு இந்திய சட்டங்கள், நீதிமன்றங்கள் மீது பெரும் நம்பிக்கை உள்ளது. ஆனால், நடந்தே வேறாக உள்ளது.’எனத் தெரிவித்தார்.

ஜுலை 2 நள்ளிரவில் பிக்ரு கிராமத்தில் நடந்த துப்பாக்கி சூட்டின் போது ரிச்சா லக்னோவிலுள்ள வீட்டில் இருந்துள்ளார். அன்றைய தினம் விகாஸ் தன் மனைவி ரிச்சாவிடம் கடைசியாக போனில் பேசியுள்ளார்.

இது குறித்து தன் பேட்டியில் ரிச்சா கூறுகையில், ’பிக்ருவில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பல போலீஸார்

கொல்லப்பட்டதாக போனில் கணவர் கூறினார். மகனை அழைத்துக்கொண்டு எங்காவது ஒளிந்துகொள்ளும்படியும் என்னை எச்சரித்தார்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து தான் லக்னோவில் தனது தோழி வீட்டில் தங்கியதாகவும், அதன் பிறகு கணவர் மீதானத் தகவல்களை செய்திகள் மூலமாகவே அறிந்ததாகவும் ரிச்சா தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னிடம் எழுபியக் கேள்விகளுக்கு அளித்த பதிலில் ரிச்சா, ‘எனது கணவர் ஒரு கிரிமினலாக இருக்கலாம். ஆனால், அவர் மிகவும் அன்பான பொறுப்பான குடும்பத் தலைவனாக எனக்கு இருந்தார்.

மாதந்தோறும் எனது செலவுகளுக்கு என ரூ.40,000 அளிப்பார். அதில் சேமித்து எனது மூத்த மகனை ரஷ்யாவில் மருத்துவம் பயில அனுப்பினேன்.’ எனக் கூறியுள்ளார்.

தனது இருமகன்களையும் பிக்ரு கிராமத்தின் கிரிமினல் நடவடிக்கைகளில் இருந்து விலக்கி வைக்கவும் விகாஸ் விரும்பியதாக ரிச்சா தெரிவித்துள்ளார். இதனால், தாம் லக்னோவில் 2004 இல் வீடுகட்டி இடம் பெயர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிக்ரு சம்பவத்திற்கு பின் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த ரிச்சா துபே, கடந்த 9 ஆம் தேதி மத்தியப்பிரதேசத்தில் விகாஸ் சிக்கிய போது பிடிபட்டார். இதன் விசாரணையில் ரிச்சாவிற்கு தன் கணவரின் நடவடிக்கைகளில் சம்மந்தம் இல்லை எனத் தெரிந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x