Last Updated : 22 Jul, 2020 02:40 PM

 

Published : 22 Jul 2020 02:40 PM
Last Updated : 22 Jul 2020 02:40 PM

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

நீதித்துறையையும், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகளையும் தரக்குறைவாக விமர்சித்த மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு எதிரான அவமதிப்பு வழக்கில் அவர் விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் 27, 29-ம் தேதிகளில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தை விமர்சித்து ட்விட்டரில் கருத்து வெளியிட்டிருந்தார். அதில், “வரலாற்று அறிஞர்கள் எதிர்காலத்தில் திரும்பிப் பார்க்கும்போது, கடந்த 6 ஆண்டுகளாக எந்தவிதமான அதிகாரபூர்வ அவசரநிலை பிறப்பிக்கப்படாமல் ஜனநாயகம் எவ்வாறு அழிக்கப்பட்டது என்பதை அறிவார்கள். அதிலும் ஜனநாயகத்தை அழிப்பதில் உச்ச நீதிமன்றத்தின் பங்கு என்ன என்பதையும், அதிலும் குறிப்பாக 4 முன்னாள் தலைமை நீதிபதிகளின் பங்கும் தெரியவரும்” எனக் குறிப்பிட்டார்.

இந்த ட்விட்டர் கருத்துதான் பிரசாந்த் பூஷண் மீது உச்ச நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர முக்கியக் காரணமாகும்.

இதுமட்டுமல்லாமல், கடந்த மாதம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே ஹார்லி டேவிட்ஸன் பைக்கில் அமர்ந்தவாறு ஒரு புகைப்படம் எடுத்திருந்தார்.

அதையும் பிரசாந்த் பூஷண் விமர்சித்து, முகக்கவசம், ஹெல்மெட் இல்லாமல் அமர்ந்த தலைமை நீதிபதி என்று விமர்சித்தார். ஆனால், உண்மையில், தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே அந்த பைக்கை இயக்கவில்லை, அந்த பைக்கில் அமர்ந்து மட்டுமே பார்த்தார், அமரும்வரை முகக்கவசம் அணிந்திருந்தார் என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் வழக்கை உச்ச நீதிமன்றம் கையாண்ட விதத்தையும், விசாரித்ததையும் பிரசாந்த் பூஷண் விமர்சித்தார்.

பிமா கோரிகான் வழக்கில் கைதாகியுள்ள சமூக ஆர்வலர்கள் வரவரா ராவ், சுதா பரத்வாஜ் ஆகியோருக்கு சரியான சிகிச்சை அளிக்காமல் இருப்பதையும், அதை நீதிமன்றம் கண்டிக்காமல் இருப்பதையும் பிரசாந்த் பூஷண் விமர்சித்தார்.

இதையடுத்து, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மீது தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் அவமதிப்பு வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் நீதிபதிகள் பி.ஆர்.காவே, கிருஷ்ணா முராரே ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ட்விட்டர் இந்தியா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்த கருத்தில், “உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால், பிரசாந்த் பூஷண் பதிவிட்ட அந்த சர்ச்சைக்குரிய கருத்தை நீக்கிவிடுகிறோம். ஆனால், அதற்கு முறைப்படியான உத்தரவை அமெரிக்க நிறுவனம் தர வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி அருண் மிஸ்ரா, இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், அட்டர்னி ஜெனரல் ஆகியோர் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் அட்டர்னி ஜெனரல் நீதிமன்றத்துக்கு உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.

மேலும், வழக்கில் ட்விட்டர் இந்தியா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அளிக்காமல் அமெரிக்காவின் ட்விட்டர் நிறுவனம் பதில் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x