Last Updated : 22 Jul, 2020 10:15 AM

 

Published : 22 Jul 2020 10:15 AM
Last Updated : 22 Jul 2020 10:15 AM

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கரோனா தடுப்பு மருந்து பரிசோதனை இந்தியாவில் ஆகஸ்ட் இறுதிக்குள் தொடங்கும்: செரம் மருந்து நிறுவனம் தகவல்

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனிக் ஆகிய நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கரோனா வைரஸ் தடுப்பு மருந்து பரிசோதனை ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் தொடங்கி, இந்தியாவில் 5 ஆயிரம் இந்தியர்களுக்கு செலுத்திப் பரிசோதிக்கப்படும் என்று செரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனிக் ஆகிய நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கரோனா வைரஸ் தடுப்பு மருந்தை இந்தியாவில் தயாரிக்கும் உரிமத்தை செரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா மருந்து நிறுவனம் பெற்றுள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய மருந்து நிறுவனங்களில் ஒன்று செரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

கரோனா வைரஸுக்கு எதிராக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்துள்ள தடுப்பு மருந்தின் முதல்கட்டப் பரிசோதனை நல்ல முடிவுகளைக் கொடுத்துள்ளதாக கடந்த இரு நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. தடுப்பு மருந்தானது மனிதர்களுக்குச் செலுத்துவதில் பாதுகாப்பாக உள்ளதாகவும், கரோனா கிருமிக்கு எதிரான வலுவான எதிர்ப்புச் சக்தியை உருவாக்குவதாகவும் கூறப்பட்டுள்ளது.

முதல்கட்டச் சோதனையில் வெற்றி கண்டதை அடுத்து 10 கோடி மருந்துகளை பிரிட்டன் வாங்கியுள்ளது. இந்நிலையில், தடுப்பு மருந்தின் மூன்றாவது கட்டச் சோதனை, பிரேசிலில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்தத் தடுப்பு மருந்தின் மூன்றாவது கட்டப் பரிசோதனை இந்தியாவில் வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் நடத்தி முடிக்க செரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா மருந்து நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து செரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா மருந்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அதார் பூனாவல்லா கூறியதாவது:

“ஆக்ஸ்போர்ட் தடுப்பு மருந்தின் மூன்றாவது கட்டப் பரிசோதனை இந்தியாவில் வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் தொடங்கி, 5 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு இந்த மருந்து பரிசோதிக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்.

இந்தியாவுக்கு இந்த மருந்தைத் தயாரித்து வழங்க, செரம் நிறுவனம் ஒப்புதல் பெற்றுள்ளது. இந்தியாவில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத் தடுப்பு மருந்துப் பரிசோதனைக்கான விண்ணப்பத்தை மருந்துக் கட்டுப்பாட்டுத் துறைக்கு அனுப்பி இருக்கிறோம். விரைவில் ஒப்புதல் கிடைக்கும் .

புனே, மும்பையில் உள்ள 4500 தன்னார்வலர்களுக்குச் செலுத்தி, தடுப்பு மருந்து பரிசோதிக்கப்படும். அவர்களுக்குச் செலுத்திப் பரிசோதிக்கும்போது கிடைக்கும் முடிவுகளைப் பொறுத்தே இந்தியாவில் இந்த மருந்து சந்தையில் விற்பனைக்கு வருமா என்பது தெரியவரும்.

அதார் பூனாவல்லா: கோப்புப் படம்

இந்தியாவில் தன்னார்வலர்களுக்குப் பஞ்சமில்லை. ஆக்ஸ்போர்டில் ஆரம்பக்கட்டப் பரிசோதனைகளில் முதியோர்களை ஒதுக்கிவைத்தனர். அதைப் போல் செய்யாமல் இந்தியாவில் பரிசோதனை செய்யப்படும்

பரிசோதனைகளில் முதியவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு முக்கியத்துவம் வழங்குவோம். ஏனெனில் தடுப்பூசியின் ஆரம்பக்கட்டப் பரிசோதனை பாதுகாப்பை நிரூபித்துள்ளதால் எந்தச் சிக்கலும் வராது.

நாங்கள் திட்டமிட்டபடி அனைத்தும் சரியாகச் சென்றால், மூன்றுவது கட்டப் பரிசோதனை, நோயாளிகளின் உடலில் செலுத்தப்பட்ட இரு மாதங்களிலிருந்து 2 மாதங்களில் முடிந்துவிடும். நவம்பர் மாதத்துக்குள் இறுதி ஒப்புதல் கிடைத்துவிடும். அவ்வாறு இல்லாவிட்டால், இந்த மருந்து அடுத்த ஆண்டு முதல் காலாண்டு அல்லது 2-வது காலாண்டில்தான் சந்தையில் கிடைக்கும்.

இயந்திரங்களில் நிலைத்தன்மையை உண்டாக்குவதற்காக, ஏற்கெனவே நாங்கள் இந்த மருந்தை 30 லட்சம் உருவாக்கிவிட்டோம். ஆனால், தயாரித்த மருந்தை ஒருபோதும் மனிதர்களுக்கு வழங்கமாட்டோம்.

இந்த மருந்து தயாரிக்கும் பணியில் ஏறக்குறைய 20 கோடி டாலர்களை எங்கள் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. இறுதி ஒப்புதல் கிடைக்கும் முன்பே 3 கோடி மருந்துகளை நாங்கள் தயாரிக்க உள்ளோம். அது எப்படியும் எங்கள் முதலீட்டுக்குச் சிக்கலானதுதான்.

அக்டோபர் மாதத்துக்குள் 7 கோடி மருந்துகளை உற்பத்தி செய்ய இருக்கிறோம். டிசம்பர் மாதத்திலிருந்து மாதந்தோறும் ஒரு கோடி மருந்துகளைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளோம். இவை அனைத்தும் மருந்துக்கான இறுதி ஒப்புதல் கிடைத்தபின்புதான் சந்தைக்கு வரும்.

அனைத்தும் சரியாகச் சென்றால் நாங்கள் செய்த 20 கோடி அமெரிக்க டாலர் முதலீடு தப்பிக்கும். இல்லாவிட்டால், 20 கோடி முதலீட்டுக்குச் சிக்கல்தான்''.

இவ்வாறு பூனாவல்லா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x