Published : 22 Jul 2020 07:53 AM
Last Updated : 22 Jul 2020 07:53 AM

6 மாத சாதனை பற்றி பரஸ்பரம் கிண்டல்; ட்விட்டர் கட்சியாக காங்கிரஸ் சுருங்கிவிடும்- ராகுல் காந்திக்கு பிரகாஷ் ஜவடேகர் பதில்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நேற்று ட்விட்டர் பதிவில் கரோனா வைரஸ் காலத்தில் மாத வாரியாக மத்திய அரசின் சாதனைகள் என்று அரசை கிண்டல் செய்து பதிவிட்டிருந்தார்.

அதில், ‘கடந்த பிப்ரவரி - நமஸ்தே ட்ரம்ப், மார்ச் - ம.பி. அரசை கவிழ்த்தல், ஏப்ரல் - மக்களை மெழுகுவர்த்தி ஏந்தச் செய்தல், மே - அரசின் 6-வது ஆண்டு விழா, ஜூன் - பிஹார் காணொலி பேரணி, ஜூலை - ராஜஸ்தான் அரசை கவிழ்க்க முயற்சி’ என்று குறிப்பிட்டிருந்தார்.

ராகுலின் இந்தக் கருத்துக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ட்விட்டரில் பதில் அளித்துள்ளார். கடந்த 6 மாதங்களில் ராகுல்காந்தியின் சாதனைகள் என்று கூறி அவரும் கிண்டலாக பதிவிட்டுள்ளார். ஜவடேகர் தனது பதிவில் கூறியிருப்பதாவது:

ராகுல் காந்தியின் கடந்த 6 மாத சாதனைகள், பிப்ரவரி - ஷாகின் பாக் மற்றும் கலவரங்கள், மார்ச் - ம.பி. அரசையும் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவையும் இழத்தல், ஏப்ரல் - தொழிலாளர்களை தூண்டிவிடுதல், மே - தேர்தலில் தோல்வியடைந்து ஆட்சியை இழந்த 6-வது ஆண்டு விழா, ஜூன் - சீனாவுக்காக வாதிட்டது, ஜூலை - ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை இழத்தல். இதுதான் ராகுலின் கடந்த 6 மாத சாதனைகள்.

கரோனா வைரஸ் பரவாமல்தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அரசின் நடவடிக்கைகளால் அமெரிக்கா, ஐரோப்பா, பிரேசிலைவிட இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்புமற்றும் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. மெழுகுவர்த்தி ஏந்தியதை கிண்டல் செய்வதன் மூலம்மக்களை நீங்கள் அவமதிக்கிறீர்கள். தினமும் அரசுக்கு எதிராக குறைசொல்லி ட்விட்டரில் பதிவு போடுவதன் மூலம் காங்கிரஸ் வெறும் ட்விட்டர் கட்சியாக சுருங்கிவிடும். இதை ராகுல் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x