Published : 21 Jul 2020 10:09 PM
Last Updated : 21 Jul 2020 10:09 PM

கரோனா; வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் சமநிலையுடன் அணுக வேண்டும்: தர்மேந்திர பிரதான் வலியுறுத்தல்

இந்தியாவில் பொது முடக்கம் தளர்த்தப்பட்டு வரும் காலத்தில் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் சமநிலையுடன் அணுகவேண்டும் என்று தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

கோவிட்-19 காலத்தில் பணியாற்றுதல் என்ற தலைப்பில் எஃகு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த, இணையவழிக் கருத்தரங்கில் மத்திய எஃகு பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான் உரையாற்றினார். நாட்டில் தற்போது பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டு வருவதையடுத்து, மக்கள் பணிக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர் என்றும், இந்த சமயத்தில் கரோனா வைரஸ் இருந்து கொண்டு தான் இருக்கிறது என்பதை நாம் கண்டிப்பாக உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.

இந்தக் கிருமி நம்மைத் தாக்காமல் இருக்க, அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும், நம் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் சமநிலையுடன் அணுக வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய எஃகுத்துறை இணை அமைச்சர் ஃபகன் சிங் குலாஸ்தே, உலக அளவிலான இந்தப் பெருந்தொற்றுக்கு எதிராக மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் ஆற்றிய பணிகள் குறித்துப் பேசினார். இந்தியாவில் குணமடைவோர் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது என்றும், அரசு அறிவித்த பொருளாதாரத் தொகுப்பு குறித்தும், மேலும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதன் அவசியம் குறித்தும் அவர் உரையாற்றினார்.

நகர்ப்புற மக்களுடன் ஒப்பிடுகையில் கிராமப்புறங்களிலும், பழங்குடியினர் வாழும் பகுதிகளிலும் உள்ள மக்கள் குறைந்த அளவிலேயே இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும், இதற்குப் பெரும்பாலான காரணம் அவர்களுடைய வாழ்க்கை முறை, உணவுப்பழக்கம் இயற்கையுடனான நெருக்கம் ஆகியவையே என்றும் கூறினார்.

இந்தத் தொற்றினால் ஏற்படக் கூடிய அபாயங்களைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா எடுத்துக்கூறினார்.

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் மொரார்ஜி தேசாய் யோகா நிறுவனம் (Morarji Desai National Institute of Yoga - MDNIY) இயக்குநர் டாக்டர். ஈஸ்வர் பசவரட்டி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ஆரோக்கியமாக வாழ்வதற்கு உதவும் அடிப்படையான யோகாசன நிலைகளையும் முறைகளையும் குறித்து விவரித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x