சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது 24-ம் தேதி வரை நடவடிக்கை எடுக்க தடை: ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவு

சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது 24-ம் தேதி வரை நடவடிக்கை எடுக்க தடை: ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சச்சின் பைலட் உள்ளிட்ட 19 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீது ஜூலை 24-ம் தேதி வரை சபாநாயகர் சி.பி. ஜோஷி எந்தவித நடவடிக்கையும் எடுக்க கூடாது என ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ராஜஸ்தானில் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்களான சச்சின் பைலட் உள்ளிட்ட 19 பேர் மீதுவரும் 21-ம் தேதி வரை சட்டப்பேரவைத் தலைவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக்கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இதனிடையே, அங்கு துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட், பாஜகவுடன் இணைந்து ஆளும் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக முதல்வர் அசோக் கெலாட்டும், அவரது ஆதரவாளர்களும் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், அங்கு அண்மையில் நடைபெற்ற இரண்டு காங்கிரஸ் கூட்டங்களில் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் கலந்துகொள்ளவில்லை. இதனைக் காரணம் காட்டி, சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. மேலும், அவர்களை தகுதிநீக்கம் செய்வது தொடர்பாக மாநிலசட்டப்பேரவைத் தலைவர் சி.பி. ஜோஷி நோட்டீஸும் வழங்கினார்.

இதற்கு எதிராக ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் சச்சின் பைலட் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில், ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக தாங்கள் எந்த செயலையும் செய்யவில்லை என்றும், எனவே சட்டப்பேரவைத் தலைவர் பிறப்பித்த நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவானது, இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் மீது வரும் 21-ம் தேதி வரை எவ்விதநடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டனர்.

பின்னர் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சச்சின் பைலட் உள்ளிட்ட 19 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீது ஜூலை 24-ம் தேதி வரை சபாநாயகர் சி.பி. ஜோஷி எந்தவித நடவடிக்கையும் எடுக்க கூடாது என ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வருகிற வெள்ளி கிழமைக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதேபோன்று ராஜஸ்தான் சட்டப்பேரவையும் ஜூலை 24-ம் தேதி வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்க கூடாது என நீதிமன்றம் கேட்டு கொண்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in