Published : 21 Jul 2020 01:58 PM
Last Updated : 21 Jul 2020 01:58 PM
அமெரிக்க – இந்திய வர்த்தக கவுன்சில் ஏற்பாடு செய்துள்ள ஐடியாஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி நாளை உரையாற்றுகிறார்.
ஜூலை 22-ம் தேதி அன்று நடைபெற உள்ள இந்தியா ஐடியாஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய உரையாற்றவுள்ளார்.
அமெரிக்க – இந்திய வர்த்தக கவுன்சில் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த கவுன்சில் நிறுவப்பட்டு, இந்த ஆண்டுடன் 45 ஆண்டுகள் ஆகின்றன. நடப்பாண்டின் இந்தியா ஐடியாஸ் உச்சி மாநாட்டின் மையப் பொருள் “சிறப்பான வருங்காலத்தை கட்டமைத்தல்” என்பதாகும்.
இந்திய, அமெரிக்க அரசுகளின் கொள்கை வகுப்பாளர்கள், உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் வர்த்தக, சமூக துறைகளின் கருத்தாளர்கள், தலைவர்கள் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் மைக் பாம்பியோ, வெர்ஜினியா மாகாண செனட்டர் மற்றும் செனட் இந்தியா காக்கசின் துணைத் தலைவர் மார்க் வார்னர், பிரிட்டனுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதர் நிக்கி ஹாலே ஆகியோர் முக்கிய உரையாற்றவுள்ளனர்.
இந்திய-அமெரிக்க ஒத்துழைப்பு, பெருந்தொற்றுக்கு பிறகான உலகில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளின் எதிர்காலம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT