

பெரிய தலைகள் உருளும் கேரளா தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரின் காவலை ஜூலை 24ம் தேதி வரை நீட்டித்து சிறப்பு என்.ஐ.ஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதே ஜூலை 24ம் தேதி இருவரது ஜாமீன் மனுவும் பரிசீலிக்கப்படும் என்று தெரிகிறது.
ஜூலை 18ம் தேதி தேசிய விசாரணை முகமை அதிகாரிகள் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் இருவரையும் அவர்களது இல்லங்கள் உட்பட பல்வேறு இடங்களுக்கு ஆதாரங்களை திரட்டுவதற்காக அழைத்துச் சென்றது.
சட்ட விரோத தடுப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் இருவர் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளது என்.ஐ.ஏ., இதன் பின்னணியில் பயங்கரவாத நிதியுதவி இருக்கலாம் என்ற கோணத்தில் வழக்கு என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்கப்பட்டது.
இதே வழக்கில் இன்னொரு குற்றம்சாட்டப்பட்ட நபரான பிஎஸ் சரித் என்பவரை ஜூலை 17ம் தேதி என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதித்தது. ஜூலை 6ம் தேதி இவர் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டார்.
இவர் திருவனந்தபுர விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமை தூதரக அலுவலகத்தில் பொதுத்தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றியவர்.
தூதரக அனுப்பீடு மூலம் ஜூலை 5ம் தேதி ரூ.15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் பிடித்தனர், அன்று முதல் இது பரபரப்பான வழக்காகியுள்ளது.