Published : 21 Jul 2020 12:28 PM
Last Updated : 21 Jul 2020 12:28 PM

நாடு முழுவதும் குழந்தைகள் காப்பகங்களுக்கு ஒதுக்கும் நிதி எவ்வளவு?- மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி

நாடு முழுவதும் குழந்தைகள் காப்பகங்களுக்கு மத்திய அரசு சார்பில் ஒதுக்கப்படும் நிதி குறித்த தகவலைத் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் 35 குழந்தைகளுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, அது தொடர்பான செய்திகளை வைத்து, நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகங்களில் கரோனா தொற்று மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிந்ததோடு, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

இந்த வழக்கு, நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் விசாரணையில் உள்ளது.

தமிழக அரசு சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன், பல்வேறு மாநிலங்கள் தரப்பில் அரசு வழக்கறிஞர்கள் ஆஜராகினர்.

தமிழக அரசு சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் ஆஜராகி, ''ராயபுரம் காப்பகத்தில் உள்ள அனைத்துக் குழந்தைகளும் குணமடைந்துவிட்டனர். தற்போது அவர்கள் மீண்டும் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்'' எனத் தெரிவித்தார்

இதனையடுத்து நீதிபதிகள், ''உ.பி, பஞ்சாப், உத்தரகாண்ட், திரிபுரா, பிஹார் உள்ளிட்ட மாநிலங்கள் பதில் மனுவை ஏன் தாக்கல் செய்யவில்லை ? பதில் மனு தாக்கல் செய்யாத அனைத்து மாநிலங்களும் விரைவில் பதிலளிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டனர்.

மேலும், ''உ.பி. மாநிலம் கான்பூரில் உள்ள அரசு காப்பகக் குழந்தைகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வந்த செய்தி உண்மையா?'' என நீதிபதிகள் கேட்டனர்.

அதற்குப் பதிலளித்த உ.பி. அரசு வழக்கறிஞர் கரிமா பர்ஷத், ''இந்த விவகாரம் தொடர்பாக அரசிடம் கேட்டு விளக்கமளிக்கிறோம்'' எனத் தெரிவித்தார்.

இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக வழக்கறிஞர் கவுரவ் அகர்வாலை நியமித்து வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது நாடு முழுவதிலும் உள்ள குழந்தைகள் காப்பகங்களுக்கு மத்திய அரசு சார்பில் கொடுக்கப்படும் நிதி குறித்த விவரங்களைத் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

நாடு முழுவதும் பல்வேறு மாநில அரசுகள் குழந்தைகள் காப்பகங்களைப் பராமரிப்பது தொடர்பான முக்கிய தகவல்கள் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்ய, நீதிமன்றத்திற்கு உதவுவதற்கு நியமிக்கப்பட்ட வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன் மூலம் உரிய உத்தரவைப் பிறப்பிக்க ஏதுவாக இருக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

அப்போது பதிலளித்த தமிழக அரசு கூடுதல் வழக்கறிஞர் சீனிவாசன், “தமிழகத்தில் உள்ள அனைத்துக் காப்பகங்களிலும் டிவி வசதி உள்ளது. ஒவ்வொரு காப்பகத்துக்கும் ஆண்டுதோறும் 5.5 லட்ச ரூபாய் வீதம் மாநில அரசால் வழங்கப்படுகிறது. மேலும் இந்த நிதி என்பது ஆண்ட்ராய்டு மொபைல் மற்றும் சேவை, இணையவழிக் கல்விக்கானது'' எனத் தெரிவித்தார்.

பின்னர் வழக்கு ஆகஸ்ட் 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x