Last Updated : 21 Jul, 2020 07:12 AM

 

Published : 21 Jul 2020 07:12 AM
Last Updated : 21 Jul 2020 07:12 AM

அயோத்தியில் ஆக. 3 முதல் 5-ம் தேதி வரை ராமர் கோயில் பூமி பூஜை- 3 நாள் பிரம்மாண்ட விழா; 40 கிலோ வெள்ளியில் அடிக்கல்

அயோத்தி ராமர் கோயில் கட்டும் பணிக்கான பூமி பூஜையை ஆகஸ்ட் 3 முதல் 5-ம் தேதி வரை பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 40 கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட அடிக்கல் நாட்டப்பட உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குள்ளாகி இருந்த 2.77 ஏக்கர் நிலத்துக்கு உரிமை கோரிய வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த நிலத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு கடந்த ஆண்டு நவம்பரில் அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக ‘ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை’ என்ற பெயரில் அறக்கட்டளை அமைக்கப்பட்டது. இந்த அறக்கட்டளையின் தலைவராக மகந்த் நிருத்ய கோபால்தாஸ் நியமிக்கப்பட்டார்.

அயோத்தியில் தற்போதுள்ள ராமர் கோயில் பகுதியில் கடந்த மார்ச் 11-ம் தேதியில் இருந்து நிலத்தை சமன்படுத்தும் பணிகள் நடந்து வந்தன. கோயிலின் கட்டுமானப் பணிகள், பூமி பூஜையுடன் ஜூலை 2-ம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பூமி பூஜை திடீர் என ரத்து செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து அண்மையில் நடந்த அறக்கட்டளை கூட்டத்தில் ஆகஸ்ட் 3 முதல் 5-ம் தேதி வரை கோயில் கட்டும் பணிக்கான பூமி பூஜை விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அடிக்கல் நாட்டு விழா ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 3 நாட்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க பிரம்மாண்டமாக நடத்தப்படுகிறது. தொடக்க விழாவுக்கு பிரதமர் மோடி உட்பட 50 முக்கிய பிரபலங்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், பிஹார் முதல்வர் நிதீஷ் குமார் ஆகியோருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

அடிக்கல் நாட்டு விழாவின்போது கருவறை அமையும் இடத்தில் வெள்ளியால் ஆன 5 செங்கல்கள் பதிக்கப்படும். இந்து வேதத்தில் 5 கோள்களை குறிக்கும் வகையில் இந்த 5 செங்கல்கள் பதிக்கப்படுகின்றன. மேலும், 40 கிலோ எடையுள்ள வெள்ளியால் ஆன பிரம்மாண்ட அடிக்கல் நாட்டப்படும்.

கோயில் கர்ப்ப கிரகம் எண்கோண வடிவில் அமைக்கப்படும் என்று தெரியவந்துள்ளது. வடஇந்திய விஷ்ணு கோயில்களைப் போன்ற வடிவில் கோயில் அமைக்கப்பட உள்ளது. 38 ஆயிரம் சதுர அடியில் கோயில் அமைக்கப்படும் என முன்பு கூறப்பட்டு வந்தது. தற்போது 76 ஆயிரம் முதல் 84 ஆயிரம் சதுர அடி வரை பரப்பளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x