Published : 20 Jul 2020 05:49 PM
Last Updated : 20 Jul 2020 05:49 PM

‘‘என் மீது அவதூறு கிளப்பினால் சட்ட நடவடிக்கை’’ - காங்கிரஸ் தலைவர்களுக்கு சச்சின் பைலட் எச்சரிக்கை

புதுடெல்லி

என் மீது அவதூறு கிளப்பினால் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பேன் என அதிருப்தி காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் பதிலளித்துள்ளார்

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக துணை முதல்வர் சச்சின் பைலட் போர்க் கொடி உயர்த்தியுள்ளார். அவரது ஆதரவு எம்எல்ஏ.க்கள் டெல்லி அருகேயுள்ள மானேசரில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்தனர்.
கெலாட் ஆட்சியை கவிழ்ப்பது தொடர்பாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், சச்சின் அணி எம்எல்ஏ பன்வார்லால் சர்மா மற்றும் சஞ்சய் ஜெயின் ஆகியோர் பேசியதாக சமூக வலைதளங்களில் ஆடியோ வெளியானது.

இதுதொடர்பாக அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உள்ளிட்ட 3 பேர் மீதும் ராஜஸ் தான் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதில் சஞ்சய் ஜெயின் கைது செய்யப்பட்டார்.
பாஜக ஆட்சி நடைபெறும் ஹரியாணாவின், மானேசர் நகர ஓட்டலில் தங்கியிருந்த பன்வார்லால் சர்மா எம்எல்ஏ.வை தேடி ராஜஸ்தான் போலீஸார் அங்கு சென்ற னர்.

அங்கு அவர் உட்பட சச்சின் அணி எம்எல்ஏ.க்கள் யாரும் இல்லை. ஓட்டலில் 17 எம்எல்ஏ.க்கள் தங்கியிருந்ததாகவும் ஓட்டலின் ரகசிய வாசல் வழியாக அவர்கள் தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து சச்சின் லைட் அணி எம்எல்ஏ.க்களை ராஜஸ்தான் போலீஸார் ஓட்டல் ஓட்டலாக தேடி வருகின்றனர்.

இந்தநிலையில் மாநிலங்களவைத் தேர்தலில் கட்சி மாறி வாக்களிக்க சச்சின் பைலட் 35 கோடி ரூபாய் தருவதாக கூறி பேரம் பேசியதாக காங்கிரஸ் எம்எல்ஏ கிரிராஜ் சிங் கூறியிருந்தார். இதற்கு சச்சின் பைலட் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது:
என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் எனக்கு வேதனையை தருகிறது. ஆனால் ஆச்சரியத்தை தரவில்லை. இவர்கள் இப்படி தான் செயல்படுவார்கள். என் மீது அவதூறு கிளப்பினால் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பேன்’’ எனக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x