Last Updated : 20 Jul, 2020 02:22 PM

 

Published : 20 Jul 2020 02:22 PM
Last Updated : 20 Jul 2020 02:22 PM

ராம ஜென்ம பூமியிலிருந்து கிடைத்த பொருட்களைப் பாதுகாக்கக் கோரும் மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்: மனுதாரர்களுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம்

கோப்புப் படம்.

புதுடெல்லி

அயோத்தியில் ராம் ஜென்மபூமிப் பகுதியில் பூமிக்கு அடியில் கிடைத்த பொருட்களைப் பாதுகாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இரு பொதுநல மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
மேலும், மனுவைத் தாக்கல் செய்த இரு மனுதாரர்களுக்கும் நீதிமன்றச் செலவாக தலா ரூ.1 லட்சத்தை ஒரு மாதத்தில் செலுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உத்தரப் பிரதேசம், அயோத்தியில் ராம ஜென்மபூமி இடத்தில் அலகாபாத் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் தோண்டப்பட்டபோது கிடைத்த பொருட்களைப் பாதுகாக்க வேண்டும், அதை இந்தியத் தொல்பொருள் ஆய்வு மையம் கண்காணிப்பில் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் சதீஸ் சிந்துஜி சம்பார்கர், டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை பொதுநல மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் பி.ஆர்.காவே, கிருஷ்ணன் முராரி ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் குறிப்பிடுகையில், “ ராமர் கோயில் வழக்குத் தொடர்பாக ஏற்கெனவே 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு ராம ஜென்மபூமி பகுதியில் தோண்டப்படும்போது எடுக்கப்பட்ட பொருட்களைப் பாதுகாக்க உத்தரவிட்டு தீர்ப்பு அளித்துவிட்டதே’’ என்றனர்.

இதற்கு மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “ராமர் கோயில் கட்ட அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையும் அந்தப் பொருட்களைப் பாதுகாப்பதாகக் கூறியுள்ளது. பல பொருட்களை பாதுகாப்பது அவசியம் என்று தெரிவித்துள்ளது” எனக் கூறினர்.

இதைக் கேட்டதும் நீதிபதிகள், “பின் எதற்காக அரசியலைப்புச் சட்டம் 32-வது பிரிவில் உச்ச நீதிமன்றததில் மனுதாரர்கள் மனு செய்தார்கள் என எங்களுக்குத் தெரியவில்லை.

இதுபோன்று முக்கியத்துவம் இல்லாத மனுக்களை தாக்கல் செய்வதை முதலில் நிறுத்துங்கள். இந்த மனுத்தாக்கல் மூலம் நீங்கள் சொல்ல வருவது என்ன, சட்டத்தின் ஆட்சி இல்லை, 5 நீதிபதிகள் அளித்த தீர்ப்பை யாரும் பின்பற்றவில்லை என்று கூறுவதற்காக இந்த மனுவைத் தாக்கல் செய்தீர்களா? இந்த மனுக்களை விசாரிக்க முடியாது தள்ளுபடி செய்கிறோம்” எனத் தெரிவித்தனர்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “முக்கியத்துவம் அற்ற மனுத்தாக்கலுக்கு அபராதம் விதிக்கலாம்” எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிபதிகள், ''இந்த மனுவைத் தாக்கல்செய்த மனுதாரர் இருவரும் நீதிமன்றச் செலவாக தலா ரூ.1 லட்சத்தை ஒரு மாதத்தில் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும்” என உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x