Last Updated : 20 Jul, 2020 09:58 AM

 

Published : 20 Jul 2020 09:58 AM
Last Updated : 20 Jul 2020 09:58 AM

ரூ.1.47 லட்சம் கோடியை வங்கியிலிருந்து கொள்ளையடித்த 2,426 நிறுவனங்கள்; என்ன செய்யப்போகிறது மத்திய அரசு?- ராகுல் காந்தி கேள்வி

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : கோப்புப் படம்.

புதுடெல்லி

வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் ரூ.1.47 லட்சம் கோடியை 2 ஆயிரத்து 426 நிறுவனங்கள் கொள்ளையடித்துள்ளன. அந்த நிறுவனங்கள் மீது மத்திய அரசு விசாரணை நடத்தப்போகிறதா, என்ன செய்யப்போகிறது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு (ஏஐபிஇஏ) கடந்த இரு நாட்களுக்கு முன் ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில், "நாட்டில் உள்ள அரசு வங்கிகளில் மட்டும் 2,426 நிறுவனங்கள் கடன் பெற்று ரூ.1.47 லட்சம் கோடியை வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் இருக்கின்றன.

இதில் ரூ.200 கோடிக்கு மேல் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் 147 நிறுவனங்கள் இருக்கின்றன. இந்தக் கடன் தொகையின் மதிப்பு ரூ.67 ஆயிரத்து 609 கோடியாகும். இதில் முதல் 10 இடங்களில் இருக்கும் பெரும்பாலான நிறுவனங்கள் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்ற நிறுவனங்களாகும்.

மொத்தமுள்ள 17 அரசு வங்கிகளில் அதிகபட்சமாக ஸ்டேட் வங்கியில் 685 நிறுவனங்கள் கடன்பெற்று திருப்பிச் செலுத்தமால் இருக்கின்றன. இதன் மதிப்பு ரூ.43 ஆயிரத்து 887 கோடியாகும். அதைத் தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் 325 நிறுவனங்கள் கடன் பெற்று, திருப்பிச் செலுத்தாமல் உள்ளன. இந்த வாராக்கடனின் மதிப்பு ரூ.22 ஆயிரத்து 370 கோடியாகும்.

பேங்க் ஆப் பரோடாவில் 355 நிறுவனங்கள் ரூ.14 ஆயிரத்து 661 கோடி கடன் பெற்று, திருப்பிச் செலுத்தாமல் இருக்கின்றன. பேங்க் ஆப் இந்தியாவில் 184 நிறுவனங்கள், ரூ.11,250 கோடியைத் திருப்பிச் செலுத்தவில்லை. யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் 128 நிறுவனங்கள் ரூ.7,028 கோடி கடன் பெற்று, திருப்பிச் செலுத்தவில்லை.

கனரா வங்கியில் 96 நிறுவனங்கள், ரூ.5,276 கோடியைத் திருப்பிச் செலுத்தவில்லை. இந்தியன் வங்கியில் 27 நிறுவனங்கள், ரூ.1,613 கோடியைத் திருப்பிச் செலுத்தவில்லை. இதுபோன்று வங்கியின் பட்டியலை வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு வெளியிட்டிருந்தது.

இந்த அறிக்கையைக் குறிப்பிட்டு காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், ''2,246 நிறுவனங்கள் வங்கியிலிருந்து மக்களின் சேமிப்பான ரூ.1.47 லட்சம் கோடியைக் கொள்ளையடித்துள்ளன.

இந்தக் கொள்ளை குறித்து மத்திய அரசு விசாரணை நடத்தி, குற்றம் செய்தவர்களைத் தண்டிக்குமா? அல்லது நிரவ் மோடி, லலித் மோடியை நாட்டைவிட்டுத் தப்பவிட்டதுபோல் இவர்களையும் நாட்டைவிட்டு தப்பிச் செல்ல மத்திய அரசு அனுமதிக்கப்போகிறதா?'' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x