Last Updated : 20 Jul, 2020 08:20 AM

 

Published : 20 Jul 2020 08:20 AM
Last Updated : 20 Jul 2020 08:20 AM

கணவரின் உடலை தள்ளுவண்டியில் இடுகாட்டுக்கு தள்ளி சென்ற மனைவி

கர்நாடகாவில் கரோனா பீதியின் காரணமாக யாரும் உதவாததால் இறந்த கணவரின் உடலை அவரது மனைவி தள்ளுவண்டியில் இடுகாட்டுக்கு தள்ளி சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள அதானியை சேர்ந்தவர் சாதஷிவ் ஹிரட்டி (55). செருப்பு தைக்கும் தொழிலாளியான இவர் கடந்த 17-ம் தேதி இரவு தனது மனைவி, மகன்கள் இருவருடன் சிக்காட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு தனி அறையில் தூங்கிய‌ சதாஷிவ் ஹிரட்டி மறுநாள் காலை வரை எழுந்திருக்கவில்லை. பலமுறை கதவை தட்டியும் திறக்காததால், அண்டை வீட்டார் உதவியுடன் கதவை திறந்து பார்த்தனர்.

அப்போது சதாஷிவ் ஹிரட்டி இறந்து கிடந்ததை தொடர்ந்து அவரை அதானி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும் கரோனா தொற்று உள்ளதா என பரிசோதித்த போது, அவருக்கு தொற்று இல்லை என தெரிய வந்தது. ஆனால் அதானியில் சதாஷிவ் ஹிரட்டி கரோனா பாதிப்பின் காரணமாக உயிரிழந்ததாக வதந்தி பரவியது.

இதனால் அச்சமடைந்த அவரது உறவினர்கள் யாரும் சதாஷிவ் ஹிரட்டியின் உடலை காண வரவில்லை. மனைவி அக்கம்மா, உறவினர்கள் பலரை அழைத்தும் உதவிக்கு யாரும் வரவில்லை. அதேபோல ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களும் கரோனா பீதியின் காரணமாக சதாஷிவ் ஹிரட்டியின் உடலை ஏற்ற ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்மா சதாஷிவ் ஹிரட்டியின் உடலை வெள்ளை சாக்கில் வைத்து கட்டி, தள்ளுவண்டியில் வைத்து சுமார் 2 கி.மீ. தூரமுள்ள இடுகாட்டுக்கு தள்ளிச் சென்றார். அவரோடு அவரது மகன்கள் இருவர் மட்டுமே வண்டியை தள்ளிச் சென்றுள்ளனர். இடுகாட்டில் உறவினர்கள் யாருடைய உதவியும் இன்றி, மூவருமே இறுதிச் சடங்கை நிறைவேற்றினர்.

இந்த சம்பவத்தின் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள‌து. இந்நிலையில் பெலகாவி மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு மாநகர ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x