Published : 18 Jul 2020 10:40 PM
Last Updated : 18 Jul 2020 10:40 PM

தொலைபேசி ஒட்டுக்கேட்பு புகார்: ராஜஸ்தான் அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டு உத்தரவு

ராஜஸ்தானில் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்து அறிக்கை அளிக்கும்படி தலைமைச் செயலாளருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக்கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இதனிடையே, அங்கு துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட், பாஜகவுடன் இணைந்து ஆளும் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக முதல்வர் அசோக் கெலாட்டும், அவரது ஆதரவாளர்களும் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், அங்கு அண்மையில் நடைபெற்ற இரண்டு காங்கிரஸ் கூட்டங்களில் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் கலந்துகொள்ளவில்லை. இதனைக் காரணம் காட்டி, சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. மேலும், அவர்களை தகுதிநீக்கம் செய்வது தொடர்பாக மாநிலசட்டப்பேரவைத் தலைவர் சி.பி. ஜோஷி நோட்டீஸும் வழங்கினார்.

இதற்கு எதிராக ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் சச்சின் பைலட் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், செவ்வாய்கிழமை மாலை 5 மணிவரை சச்சின் பைலட், உள்பட 19 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க தடைவிதித்தது. மேலும், சபாநாயகர் எழுத்துபூர்வமாக எழுதிக்கொடுக்கவும் உத்தரவிட்டது.

இந்தநிலையில் பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான கஜேந்திர சிங் ஷெகாவத், காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ பன்வர் லால் சர்மா ஆகியோர் அசோக் கெலாட் ஆட்சியை கவிழ்கக் பேரம் பேசிய ஆடியோ டேப்பை வெளியிட்ட காங்கிரஸ் கட்சி அவர்களைக் கைது வேண்டும் என வலியுறுத்தியது.

இதனையடுத்து ராஜஸ்தானில் அரசியல் தலைவர்களின் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுவதாக பாஜக குற்றம்சாட்டியது.
இதுகுறித்து பாஜகவின் சம்பித் பத்ரா கூறுகையில் ‘‘அசோக் கெலாட் மற்றும் காங்கிரஸ் கட்சியிடம் சில கேள்விகளை கேட்க விரும்புகிறோம். மாநிலத்தில் போன் ஒட்டு கேட்கப்படுகிறதா? அதற்கான விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? மாநிலத்தில் தாங்கள் ஓரங்கட்டப்பட்டோம் என்பதை உணர்ந்து கொண்ட காங்கிரஸ் தலைவர்கள், தங்களை காப்பாற்றி கொள்ள சட்ட விரோதமான வழிகளை கையாள்கிறதா? தங்களின் தனியுரிமையில் ஏதும் சமரசம் செய்ய வேண்டியுள்ளதா என ராஜஸ்தான் மக்கள் கேட்கின்றனர். அரசியல் தலைவர்களின் போன் ஒட்டு கேட்கப்படுகிறதா? இது குறித்து மாநில அரசு உடனடியாக பதிலளிப்பதுடன், இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’’ என தெரிவித்தார்.

இந்தநிலையில் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்து அறிக்கை அளிக்கும்படி ராஜஸ்தான் தலைமைச் செயலாளருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x