Last Updated : 18 Jul, 2020 04:28 PM

 

Published : 18 Jul 2020 04:28 PM
Last Updated : 18 Jul 2020 04:28 PM

ராஜஸ்தானில் குடியரசு தலைவர் ஆட்சியை ஆளுநர் பரிந்துரை செய்ய வேண்டும்: மாயாவதி வலியுறுத்தல்

ராஜஸ்தானில் நிலையற்ற ஆட்சியைக் கருத்தில் கொண்டு, ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா குடியரசுத் தலைவர் ஆட்சியை பரந்துரைக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி வலியுறத்தியுள்ளார்.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக்கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இதனிடையே, அங்கு துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட், பாஜகவுடன் இணைந்து ஆளும் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக முதல்வர் அசோக் கெலாட்டும், அவரது ஆதரவாளர்களும் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், அங்கு அண்மையில் நடைபெற்ற இரண்டு காங்கிரஸ் கூட்டங்களில் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் கலந்துகொள்ளவில்லை. இதனைக் காரணம் காட்டி, சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. மேலும், அவர்களை தகுதிநீக்கம் செய்வது தொடர்பாக மாநிலசட்டப்பேரவைத் தலைவர் சி.பி. ஜோஷி நோட்டீஸும் வழங்கினார்.

இதற்கு எதிராக ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் சச்சின் பைலட் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், செவ்வாய்கிழமை மாலை 5 மணிவரை சச்சின் பைலட், உள்பட 19 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க தடைவிதித்தது. மேலும், சபாநாயகர் எழுத்துபூர்வமாக எழுதிக்கொடுக்கவும் உத்தரவிட்டது.

இதற்கிடையே, சச்சின் பைலட் ஆதரவாளரும் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ரமேஷ் மீனா, பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து பிரிந்து காங்கிரஸில் சேர்ந்தவர்.

அவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் முதல்வர் அசோக் கெட்டை கடுமையாக சாடியிருந்தார். அதில் “ குதிரை பேரத்தில் நாங்கள் ஈடுபட்டதாககூறும் அசோக் கெலாட், நான் உள்ளிட்ட 3 பேர் பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்களா இருந்தபோது எத்தனை கோடிகள் பேரம் பேசினீர்கள் எனச் சொல்ல முடியுமா” எனக் கேள்வி கேட்டிருந்தார்.

பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான கஜேந்திர சிங் ஷெகாவத், காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ பன்வர் லால் சர்மா ஆகியோர் அசோக் கெலாட் ஆட்சியை கவிழ்கக் பேரம் பேசிய ஆடியோ டேப்பை வெளியிட்ட காங்கிரஸ் கட்சி அவர்களைக் கைது வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

ஆடியோ டேப் விவகாரம் புனையப்பட்ட ஒன்று என்று மறுத்துள்ள பாஜக, இதில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்த சூழலில் பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில் “ ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இரு முறை பகுஜன் சமாஜ் கட்சியை ஏமாற்றி விட்டார். 2-வது முறையாக எங்களின் கட்சி எம்எல்ஏக்களை குதிரைபேரத்தின் மூலம் விலைக்கு வாங்கியது தெரியவந்துள்ளது. ராஜஸ்தானில் நிலையில்லாத ஆட்சி நடப்பதால், ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைக்க வேண்டும்.

ராஜஸ்தான் அரசு எம்எல்ஏக்கள் தொலைப்பேசியை ஒட்டுக்கேட்டு சட்டவிரோதமான வகையில் நடந்துள்ளது. முதல்வர் கெலாட் சட்டவிரோதமாக நடந்து தனது ஆட்சியை காப்பாற்ற முயன்றது தெரியவந்துள்ளது. மாநிலத்தில் உள்ள ஜனநாயகம் தொடர்ந்து அழிவை நோக்கிச் செல்லக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x