Last Updated : 18 Jul, 2020 02:26 PM

 

Published : 18 Jul 2020 02:26 PM
Last Updated : 18 Jul 2020 02:26 PM

பல்கலைக்கழக இறுதி ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்தும் யுஜிசி முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: சிவசேனா மனுத்தாக்கல்

பல்கலைக்கழக, கல்லூரிகளில் பயிலும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு வரும் செப்டம்பர் மாதத்துக்குள் தேர்வு நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்ற பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா கட்சி வழக்குத் தொடர்ந்துள்ளது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பது குறித்து இன்னும் நீதிமன்றம் முடிவு செய்யவில்லை.

கரோனா வைரஸ் பரவத் தொடங்கியதையடுத்து, மார்ச் மாதத்திலிருந்து நாட்டில் அனைத்துக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன. இதுவரை எந்தத் தேர்வும் நடத்தப்படவில்லை. தேர்வுகள் நடத்தப்படுமா அல்லது முந்தைய மதிப்பெண்கள் கணக்கில் எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்புடன் கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் இருந்தனர்.

ஏனென்றால், ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் மாணவர்களைத் தேர்வு பெற்றதாக அறிவித்து, கரோனா காலத்தில் தேர்வுகளை நடத்த முடியாமல் ரத்து செய்வதாகத் தெரிவித்தன.

இந்தச் சூழலில் மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த வாரம் பிறப்பித்த உத்தரவில், பல்கலைக்கழக, கல்லூரித் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று அறிவித்தது. அதைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் மாதம் பல்கலைக்கழக மற்றும் கல்லூரித் தேர்வுகள் நடத்தப்படும் என்று அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் யுஜிசி வெளியிட்டது.

ஆனால், கரோனா வைரஸ் காலத்தில் பல்கலைக்கழகத் தேர்வுகளை நடத்துவது இயலாதது, தேர்வுகளை நடத்தும் முடிவை மாநில அரசுகளிடமே தர வேண்டும் எனக் கோரி மத்திய அரசுக்கு தமிழகம், டெல்லி, ஒடிசா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா,பஞ்சாப் ஆகிய 6 மாநிலங்கள் கடிதம் எழுதின. இதில் டெல்லி அரசு, தேர்வுகள் ரத்து செய்ய முடிவு எடுத்திருப்பதாகவே அறிவித்துவிட்டது.

ஆனால், யுஜிசி தேர்வு நடத்துவதில் திட்டவட்டமாக இருக்கிறது. இது தொடர்பாக யுஜிசி வெளியிட்ட அறிவிப்பில், ''755 பல்கலைக்கழகங்களிடம் இருந்து கருத்துகள் வந்துள்ளன. அதில் 194 பல்கலைக்கழகங்கள் ஏற்கெனவே தேர்வுகளை நடத்தி முடித்துவிட்டதாகவும், 366 பல்கலைக்கழகங்கள் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் தேர்வுகளை நடத்தத் திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளன'' எனக் குறிப்பிட்டது.

இதையடுத்து, மகாராஷ்டிராவில் ஆளும் கட்சியான சிவசேனாவின் யுவசேனா பிரிவு யுஜிசியின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

இது தொடர்பாக யுவசேனா அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நாட்டில் உள்ள மாணவர்களின் மனநிலை, உடல்நிலை, அச்சம், பாதுகாப்பு ஆகியவற்றைப் புறக்கணித்து மத்திய அரசு செயல்படுகிறது. அதனால்தான் யுஜிசி அமைப்பை பல்கலைக்கழகத் தேர்வு நடத்த அனுமதித்துள்ளது.

கரோனா வைரஸ் தேசியப் பேரிடராக அமைந்துள்ளது. அதைக் கருத்தில் கொண்டு, யுஜிசி தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும். ஆனால், நாட்டு மக்கள் சந்தித்துவரும் சூழலை யுஜிசி புரிந்து கொள்ளவில்லை என்பதையே அதன் செயல்பாட்டு வெளிப்படுத்துகிறது.

தேர்வுகள் நடத்தப்படும்போது மாணவர்களுக்கும், தேர்வு கண்காணிப்பாளர்களுக்கும் கரோனா வைரஸ் பரவும் ஆபத்து இருக்கிறது. நாட்டில் உள்ள பெரிய உயர் கல்வி நிறுவனங்களான ஐஐடி கூட இறுதிஆண்டுத் தேர்வுகளை ரத்து செய்துவிட்டன.

மாணவர்கள் இதற்கு முன் எடுத்துள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். மாணவர்களின் பாதுகாப்புதான் முக்கியம். ஆதலால், யுஜிசி உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிடுகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் ஆதித்யா தாக்கரே ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “யுஜிசி மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் முடிவான பல்கலைக்கழக இறுதி ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்தும் முடிவு முற்றிலும் அபத்தமானது மற்றும் அநேகமாக வேறு உலகத்திலிருந்து வந்திருப்பார்கள்.

நீ பெரியவனா, நான் பெரியவனா என்ற அகந்தையோடு யுஜிசி செயல்படாமல், லட்சக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களின் உயிர் தொடர்பானது என்பதை உணர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x