Published : 18 Jul 2020 08:51 AM
Last Updated : 18 Jul 2020 08:51 AM

தெலங்கானா தலைமைச் செயலகத்தை இடிப்பதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி

ஹைதராபாத்

தெலங்கானாவில் ஹைதராபாத் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தலைமைச் செயலகத்தில் வாஸ்து தோஷம் இருப்பதாகக் கூறி, இதனை முழுவதுமாக இடித்துவிட்டு, ரூ.400 கோடியில் புதிய கட்டிடம் கட்ட முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு முடிவெடுத்தது.

இந்நிலையில், 6 லட்சம் சதுர அடியில் உள்ள அனைத்து கட்டிடங்களையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கும் பணிகள் கடந்த வாரம் தொடங்கின. இதில் பழங்கால நிஜாம் மன்னர்கள் கட்டிய கட்டிடம் உட்பட புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களையும் இடித்ததால், இதுகுறித்து விரிவுரையாளர் விஷ்வேஸ்வர ராவ் என்பவர் ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரணைக்கு ஏற்ற உயர் நீதிமன்றம் உடனடியாக கட்டிடம் இடிக்கும் பணிகளை நிறுத்த வேண்டுமென தெலங்கானா அரசுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது. இதனால் தலைமைச் செயலகம் இடிக்கும் பணிகள் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமைச் செயலகம் இடிக்க மத்திய அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறையின் அனுமதி தேவையில்லை என்றும், ஹைதராபாத் மாநகராட்சியின் அனுமதியை பெற்றுள்ளோம் என்றும் தெலங்கானா அட்வகேட் ஜெனரல் பிரசாத் தனது வாதத்தை எடுத்துரைத்தார். மேலும், ஏற்கெனவே 80 சதவீத கட்டிடங்கள் இடிக்கப்பட்டுவிட்டன என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனை தொடர்ந்து உயர் நீதிமன்றம் இடைக்கால தடையை நீக்கி புதிய தலைமைச் செயலகம் கட்ட அனுமதி அளித்தது. இதனை தொடர்ந்து நேற்று மாலை முதல் மீண்டும் தலைமைச் செயலக கட்டிடத்தின் இடிக்கும் பணிகள் தொடங்கின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x