Last Updated : 17 Jul, 2020 04:49 PM

 

Published : 17 Jul 2020 04:49 PM
Last Updated : 17 Jul 2020 04:49 PM

பிரதமர் மோடியின் தொடர் தவறுகள், பொறுப்பின்மையால்தான் தேசம் பலவீனமடைந்துவிட்டது: ராகுல் காந்தி வீடியோ வெளியிட்டு விமர்சனம்

பிரதமர் மோடியின் பொறுப்பின்மை, தொடர்ச்சியான தவறுகளால்தான் தேசம் பலவீனமடைந்துவிட்டது. கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தியா தனது வெளியுறவுக் கொள்கை, பொருளாதாரம் மற்றும் அண்டை நாடுகளுடனான உறவு ஆகியவற்றுடனான சிக்கலைப் பயன்படுத்திதான் சீனா எல்லைக் பகுதியில் தற்போது ஆக்ரோஷமாக செயல்படுகிறது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வீடியோவில் விமர்சித்துள்ளார்.

கிழக்கு லடாக் எல்லைப்பகுதியில் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்தியா-சீனா ராணுவத்துக்கு இடையே கடந்த மாதம் 15-ம் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டார்கள். இந்த தாக்குதலுக்கு பின் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

எல்லைப் பகுதியில் இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது, மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்று ராகுல் கேள்வி எழுப்பி வந்தார். இந்திய நிலப்பகுதியை மோடி சீனாவிடம் சரண்டர் செய்துவிட்டார் என்று காட்டமாக விமர்சித்தார்.

இந்த சூழலில் ராகுல் காந்தி, ட்விட்டரி்ல் ஒரு வீடியோ வெளியிட்டு மத்தியஅரசை கடுமையாக விமர்சித்து, பல்வேறு கேள்விகள் எழுப்பியுள்ளார். அதில் அவர் கூறியருப்பதாவது:

கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து பிரதமர் மோடியின் தொடர்ச்சியான தவறுகள்,பொறுப்பின்மை ஆகியவை தேசத்தை அடிப்படையாகவே பலவீனமாக்கி நம்மை பாதிக்கக்கூடியதாகவிட்டுவிட்டது. மோடியின் வெற்று வார்த்தை ஜாலங்கள் உலக அரசியல் சூழலுக்கு போதாது

கடந்த 6 ஆண்டுகளாக இந்தியா ஒருவிதமான கலகத்துடனும், சீர்குலைந்தும் இருக்கிறது. ஏனென்றால், தேசத்தின் பொருளாதாரத்தை பாதுகாப்பதில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது, வெளியுறவுக்கொள்கையை பராமரிப்பும் கவலை கொள்ளும் விதத்தில் இருக்கிறது, அண்டை நாடுகளுடன் சரியான நட்புறவை பராமரிப்பதில் இந்தியா தோல்வி அடைந்துவிட்டது.

இந்த சூழல்தான் சரியான தருணம் என சீன ராணுவம் முடிவு செய்து, அதைப் பயன்படுத்தித்தான் கிழக்கு லடாக் எல்லையில் ஆவேசமாக நடந்துள்ளார்கள்.

உலக நாடுகள் தங்களை ஆயுதங்களாலும், ராணுவத்தாலும் பாதுகாத்தாலும், ஒரு நாடு அண்டை நாடுகளுடன் கொண்டிருக்கும் நட்புறவால் பாதுகாக்கப்படுகிறது, அண்டை நாடுகளால் பாதுகாக்கப்படுகிறது, தன்னுடைய பொருளாதாரத்தாலும் மக்களின் மீதான உணர்வாலும், மக்கள் மீதான கண்ணோட்டத்தாலும் பாதுகாக்கப்படுகிறது.

முன்பெல்லாம் ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுடன் இந்தியா ராஜாங்கரீதியிலான நட்புறவை பகிர்ந்து கொண்டிருந்தது. ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளுடன் இந்தியா கொண்டிருந்த நட்புறவின் உதவியால் உலக அரசியலில் கவனத்துடன் இந்தியா முன்னோக்கி நகர முடிந்தது. ஆனால், இப்போது இந்த நாடுகளின் நட்புறவை நீண்டகாலத்துக்கு அனுபவிக்க விரும்பவில்லை.

அமெரிக்காவுடனும், ஐரோப்பிய நாடுகளுடனும் நமக்கு வர்த்தகப் பரிமாற்ற உறவு மட்டுமே இருக்கிறது. ரஷ்யாவுடனான உறவில் ஒருவித கலக்கம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானைத் தவிர்த்து மற்ற அண்டை நாடுகள் அனைத்தும் கடந்த காலத்தில் இந்தியாவுடன் கூட்டுறவுடன் இணைந்து செயல்பட்டன. ஆனால் இன்று நேபாளம் நம்மீது கோபப்படுகிறது, இலங்கை தனது துறைமுகத்தை சீனாவுக்கு கொடுத்திருக்கிறது. மாலத்தீவு, பூடான் கூட நம்முடனான உறவில் அதிருப்தி அடைந்துள்ளன. நம்முடைய அண்டை நாடுகளுடனும், அன்னிய நாடுகளுடனும் நம்முடைய உறவு சீர்குலைந்துள்ளது.

நம்முடைய பொருளதாாரம்தான் நமக்கு கவுரவம். உலகளவில் முன்னோக்கி நாம் நடைபோடுவதற்கு நம்முடைய பொருளாதாரம் பெருமைக்குரியதாகவும், கவுரவத்துக்குரியதாகவும் இருந்தது. ஆனால் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான பொருளாதார வளர்ச்சியை நாம் இப்போது பெற்றுள்ளோம்,

வேலையின்மை 40 ஆண்டுகளில் இல்லாத அளவு வளர்ந்துவிட்டது, பொருளாதாரம் முழுமையாக சீர்குலைந்து பார்க்கமுடியாததாக மாறிவிட்டது. நம்முடைய பலமெல்லாம், திடீரென பலவீனமாகிவிட்டன.

நாம் பலவீனமடைந்து கொண்டே செல்கிறோம் என்று நாங்கள் பலமுறை மத்திய அரசிடம் வலியுறுத்தினோம். பொருளாதாரத்துக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுங்கள், அனைவரும் ஒன்றோடொன்று பின்னப்பட்டவர்கள், தனிப்பட்டவர்கள் அல்ல. பொருளாதாரத்துக்கு ஊக்கம் அளியுங்கள், சிறுதொழில்களை பாதுகாப்பு கொடுங்கள் என்று தெரிவித்தோம். ஆனால் அரசு மறுத்துவிட்டது

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x