Last Updated : 17 Jul, 2020 03:05 PM

 

Published : 17 Jul 2020 03:05 PM
Last Updated : 17 Jul 2020 03:05 PM

இந்தியா பலவீனமான நாடு அல்ல;நம்முடைய ஒரு அங்குல நிலத்தை தொடக்கூட உலகில் எந்த சக்தியும் இல்லை: ராஜ்நாத் சிங் ஆவேசம்

இந்தியா ஒன்றும் பலவீன நாடு அல்ல. இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தை
தொடக்கூட உலகில் எந்த சக்தியும் இல்லை என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆவேசமாகத் தெரிவித்தார்.

கிழக்கு லடாக் எல்லையில் சீன ராணுவத்துக்கும் இந்திய ராணுவத்துக்கும் இடையே கடந்த மே மாதம் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இருதரப்பும் ராணுவ வீரர்களையும் போர் தளவாடங்களையும் எல்லையில் குவித்ததால், கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக எல்லையில் போர்ப் பதற்றம் நிலவியது.

பதற்றத்தைத் தணிக்க பல்வேறு நிலைகளில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றநிலவையில் இருதரப்பும் ராணுவ வீரர்களை படிப்படியாக வாபஸ் பெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக சூசல் பகுதியில் இருதரப்பு ராணுவ கமாண்டர்கள் இடையே கடந்த சில நாட்களுக்கு முன் 4-ம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த சூழலில் ஜம்மு காஷ்மீர் மற்றும் கிழக்கு லடாக் பகுதியில் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று காலை தனிவிமானம் மூலம் லடாக்கில் உள்ள லே பகுதிக்குச் சென்றார். அவருடன் தலைமை பாதுகாப்பு அதிகாரி ஜெனரல் பிபின் ராவத், தரைப்படை தளபதி ஜெனரல் எம்.எம். நரவாணே ஆகியோர் உடன் சென்றனர்.

ராணுவ வீரர் ஒருவருக்கு இனிப்பு ஊட்டிய ராஜ்நாத் சிங்: படம் ஏஎன்ஐ

லே பகுதிக்கு மேல் இருக்கும் ஸ்டக்னா, லுகுங் பகுதிகளை ராஜ்நாத் சிங் ஆய்வு செய்கிறார். ஸ்டக்னா பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் நடத்தும் சாகச நிகழ்ச்சிகள், பாதுகாப்பு ஒத்திகைகள் ஆகியவற்றையும் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார். மேலும், ராணுவத்தின் டி-90 டாங்கிகள், பிஎம்பி கவசபோர் வாகனங்கள் ஆகியவற்றையும் ராஜ்நாத் சிங் பார்வையி்ட்டார்.

அதன்பின் இந்திய-திபெத் படையினர், ராணுவ வீரர்களுடன், துணை ராணுவப்படையினர் ஆகியோருடன் ராஜ்நாத் சிங் உரையாடி, பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கேட்டறிந்தார்.

அதன்பின் லூகங் பகுதியில் ராணுவ வீரர்கள், இந்திய-திபெத் வீரர்கள் மத்தியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

கிழக்கு லடாக் எல்லையில் நடந்த பிரச்சினை, எல்லைப்பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பாக சீனாவுடன் இந்தியத் தரப்பில் பேச்சு நடந்து வருகிறது. இந்த பேச்சின் மூலம் அந்த எல்லைத் தீர்க்கப்படலாம்.

ஆனால், தீர்்க்கப்படும் என்று உறுதியளிக்க முடியாது. பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தால் அதைவிடச் சிறந்தது வேறுஏதும் இல்லை.

நான் உங்களுக்கு ஒன்று உறுதியளிக்கிறேன். இந்தியா ஒன்றும் பலவீனமான நாடு கிடையாது. இந்தியாவின் நிலப்பகுதியில் ஒரு அங்குலத்தைத் தொடக்கூட உலகில் எந்த சக்தியும் கிடையாது.

சமீபத்தில் கிழக்கு லடாக்கின் பிபி14 பகுதியில் சீனா ராணுவத்துடன் நடந்த மோதலில் நமது வீரர்கள் எல்லையைக் காக்கும் போரட்டத்தில் உயிர்த்தியாகம் செய்தனர். இந்த நேரத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்,

அதேநேரத்தில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்காகவும், அவர்களை இழந்ததற்காகவும் வருத்தப்படுகிறேன். அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்.நம்முடைய வீரர்களின் உயிர்த்தியாகம் ஒருபோதும் வீணாக அனுமதிக்கமாட்டோம்.

இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x