Last Updated : 17 Jul, 2020 08:15 AM

 

Published : 17 Jul 2020 08:15 AM
Last Updated : 17 Jul 2020 08:15 AM

தங்கம் கடத்தலில் விசாரிக்கப்பட்ட கேரள மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் சஸ்பெண்ட்: தூதரகத்தின் அதிகாரி நாட்டைவிட்டு வெளியேறினார்

ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் : கோப்புப்படம்

திருவனந்தபுரம்

கேரளாவில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரைப் பயன்படுத்தி 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் விசாரிக்கப்பட்டு வந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி எம். சிவசங்கரை சஸ்பெண்ட் செய்து முதல்வர் பினராயி விஜயன் நேற்று உத்தரவிட்டார்.

கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளராகவும், தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளராகவும் இருந்த சிவசங்கர் மீது தங்கம் கடத்தலில் தொடர்புடைய பெண் ஸ்வப்னா சுரேஷுடன் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தவுடன் அவர் அந்த இரு பதவியிலிருந்தும் கேரள அரசால் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர தங்கம் கடத்தல் வழக்கில் முக்கியச் சாட்சியாக கருதப்படும் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் சத்தமில்லாமல் டெல்லி சென்று அங்கிருந்து விமானம் மூலம் தனது சொந்த நாட்டுக்குச் சென்றுவிட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வழக்கில் தங்கம் கடத்தல் தொடர்பான பல்வேறு விவரங்களை அவரிடம் விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் திட்டமிட்டிருந்த நிலையில் அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ்

கேரளாவில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தைப் பயன்படுத்தி கடத்தப்பட்ட 30 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அந்த தூதரகத்தின் முன்னாள் ஊழியர் சரித் குமார் என்பவரைக் கைது செய்தனர். பின்னர் அந்த வழக்கு என்ஐஏவிசாரணைக்கு மாற்றப்பட்டது.

சரித் குமார் அளித்த தகவலின்படி, முக்கியக் குற்றவாளியாகக் கூறப்படும் ஸவப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை என்ஐஏ அமைப்பினர் கைது செய்தனர்.

இதில் முக்கியக் குற்றவாளியாகக் கூறப்படும் ஸ்வப்னா சுரேஷ் ஐக்கிய அரபு அமீரக தூதரத்தின் முன்னாாள் ஊழியர், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப துறையில் விற்பனை மேலாளராகாகவும் இருந்தபோதுதான் இந்த குற்றச்சாட்டில் சிக்கினார்.

இந்த விவகாரம் வெளியானது தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளராகவும், முதல்வரின் தனிப்பிரிவுச் செயலாளராகவும் இருந்த சிவசங்கர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதால், ஒரு ஆண்டு விடுப்பில் சென்றுள்ளார்.

இந்நிலையில் தங்கக் கடத்தில் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கு சுங்கத்துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர்.

சுங்கத்துறை அதிகாரிகள் அனுப்பிய சம்மனைத் தொடர்ந்து, கடந்த செவ்வாய்கிழமை நேரில் ஆஜராக திருவனந்தபுரத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்துக்கு கடந்த செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்கு ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் சென்றார். அவரிடம் 9 மணிநேரம் விசாரணை நடத்தினர்.

இது தவிர சிவங்கர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த தலைமைச்ச செயலாளர் டாக்டர் விஸ்வாஸ் மேத்தா தலைமையில் குழுவை முதல்வர் பினராயி விஜயன் அமைத்திருந்தார். அந்த குழுவினர் விசாரணை நடத்தியதில், தங்கம் கடத்தலில் கைதாகி இருக்கும் ஸ்வப்னா சுரேஷுடன் சிவசங்கருக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது உண்மை எனத் தெரியவந்தது.

இதையடுத்து அனைத்து இந்திய குடிமைப்பணிச் சேவை விதிகளின்படி, சிவசங்கரை சஸ்பெண்ட் செய்து நேற்று இரவு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டார்.

இந்த சூழலில் இந்த தங்கம் கடத்தல் வழக்கில் முக்கியத் துருப்பாக ஐக்கிய அரபு அமீரக தூதரக அதிகாரி ஒருவர் சாட்சியாக இருந்து வந்தார். ஆனால், வியன்னாஒப்பந்தத்தின் பாதுகாப்பை பயன்படுத்தி, கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி சென்று, அங்கிருந்து விமானம் மூலம் தனது சொந்த நாட்டுக்கு தப்பி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து என்ஐஏ அதிகாரிகள் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் நிருபர்களிடம் கூறுகையில் “ தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் அளித்த பரிந்துரையின்படி மூத்த ஐஏஎஸ்அதிகாரி சிவசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மத்திய அ ரசின் குடிமைப்பணிகள் விதிமுறைகளை மீறியுள்ளதை தலைைமச் செயலாளர் தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

சிவசங்கர் மீது இனி துறைரீதியான விசாரணை தொடர்ந்து நடைபெறும். ஸ்வப்னா சுரேஷ் போலி சான்று கொடுத்தது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு சிபிஐ விசாரணை தேவையில்லை ” எனத் தெரிவித்தார்

காங்கிரஸ் எதிர்க்கட்சித்தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறுகையில் “ முதல்வர் பினராயி விஜயனிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளிவரும். சிங்கரை முழுமையாகப் பாதுகாக்க முதல்வர் முயல்கிறார். ஆனால் அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்துள்ளன, அதனால் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த கடத்தலில் முதல்வரும் ஈடுபட்டுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது என்பதால் அவரிடமும் விசாரித்தால்தான் உண்மை வெளியாகும்” எனத் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x